சென்னையில் இனி டீ ரூ. 5, காபி விலை ரூ. 6
சென்னை: சென்னை நகரில் உள்ள அனைத்து டீக் கடைகளிலும் ஒரே சீராக டீ விலை ரூ. 5, காபி ரூ. 6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறதாம்.
காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பால், சர்க்கரை, டீத் தூள், காபி தூள் ஆகியவற்றின் விலை காரணமாக டீ, காபி ஆகியவற்றின் விலையை கடைக்காரர்கள் உயர்த்தியுள்ளனர்.
சென்னை நகரில் காபி, டீ ஆகியவற்றின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றாக உள்ளது. சிலர் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து பழைய விலையில் டீ, காபி போட்டுத் தருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது டீ, காபி ஆகியவற்றின் விலையை ஒரே சீராக நகர் முழுவதும் மாற்றியுள்ளனர். அதன்படி டீ விலை ரூ. 5 எனவும், காபி விலை ரூ. 6 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருகிற 15ம் தேதி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறதாம்.
இதுகுறித்து டீக்கடைக்காரர்கள் தரப்பில் கூறுகையில்,
வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை மட்டுமே டீக் கடைகளில் பயன்படுத்த கூறியுள்ளனர். இதுதொடர்பாக ரெய்டுளும் நடத்தி பிடிக்கின்றனர்.
அதேசமயம், பெரிய ஹோட்டல்களுக்கும், சாதாரண டீக் கடைகளுக்கும் ஒரே விலையில்தான் வர்த்தக சிலிண்டர்களைத் தருகின்றனர். ஒரு சிலிண்டரின் விலை ரூ. 1080 ஆக உள்ளது.
தற்போது சர்க்கரை, பால் போன்ற பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க காபி, டீவிலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 15-ந்தேதி முதல் காபி, டீ விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.