அங்கீகாரம் இல்லாத மேலும் 10 பள்ளிகளை மூட உத்தரவு
நாகப்பட்டனம்: நாகை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த மேலும் 10 பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் கரியாப்பட்டனத்தில் உள்ள தேவி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவ மாணவியர் 9 பேரும், ஆசிரியை சுகந்தியும் வேன் விபத்தில் கொடுமையாக உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட தேவி பள்ளி அங்கீகாரம் முடிந்த பின்னரும் அதைப் புதுப்பிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது தெரிய வந்து அந்தப் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மேலும் 10 பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் முனியநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில், 10 பள்ளிகள் அங்கீகாரம் முடிவடைந்தும் தொடர்ந்து செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இந்தப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளில் தற்போது படித்து வரும் மாணவ, மாணவியரை அருகாமையில் உள்ள வேறு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் சேர்க்க உதவி கல்வி அதிகாரிகள் உதவுவார்கள் என்றார்.
மூடப்பட்ட பள்ளிகள் விவரம்..
நாகை - ஏஜேசி பப்ளிக் பள்ளி மற்றும் வித்யாரம்பம் நர்சரி தொடக்கப் பள்ளி.
சேமநாதனிருப்பு - சரஸ்வதி வித்யாலயா நர்சரி தொடக்கப் பள்ளி.
செம்பனார்கோவில் - மணியம்மை நர்சரிப் பள்ளி.
திருமுல்லைவாசல் - வெற்றி நர்சரி தொடக்கப் பள்ளி.
கீழையூர் - மாஸ் நர்சரி தொடக்கப் பள்ளி.
புஷ்பவனம் - வேலுமணி நர்சரி தொடக்கப் பள்ளி.
எருக்கூர் - மெளன்ட் கார்மல் நர்சரி தொடக்கப் பள்ளி.
நாகூர் - அல் இஷாத் நர்சரி தொடக்கப் பள்ளி.
கொருக்கை - ஆக்ஸ்போர்ட் நர்சரி தொடக்கப் பள்ளி.
--












Click it and Unblock the Notifications