இலங்கைக்கு மீண்டும் எம்.பிக்கள் குழு- கருணாநிதி திருப்தி
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளை பார்வையிட இலங்கைக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அனுப்பப்படும் என்று மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்திருப்பது மனதுக்கு மிகவும் ஆறுதல் தரக் கூடிய செய்தி என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று தொடர்ந்து செய்தி பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்குப் பிடிக்காத செய்தி இது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புழல் முகாமி்ல் மேற்கொள்ளப்படும் உதவி்த் திட்டங்கள் குறித்து முதல்வர் கருணாநிதி குறிப்பிடுகையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புழல் முகாமுக்குச் சென்று, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் உதவித் தொகை வழங்கினார்.
மேலும் புழல் முகாமில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக புகைப்படம் எடுக்கும் பணி துவக்கப்பட்டு விட்டது. புதிய ரேஷன் கடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சுமார் எட்டு கோடி ரூபாய் செலவில் புதிய குடியிருப்புகள் அங்கே கட்டுவதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த முகாமைப் போல தமிழகத்திலே உள்ள மற்ற முகாம்களுக்கான பணிகளும் முறைப்படி திட்டமிடப்பட்டு நடைபெறத் தொடங்கிவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நான்கு நாள்களுக்கு கூலி பட்டுவாடா செய்யக்கூடாது என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது குறித்து கருணாநிதி பதில் அளிக்கையில்,
தேவையில்லாத ஒரு அறிவிப்பை வேண்டுமென்றே நமது தமிழகத் தேர்தல் ஆணையர் கூறி புதியதோர் குழப்பத்தை உண்டாக்குவதாக யாரும் நினைக்க வேண்டாம். அவர் மிகவும் கண்டிப்பாக விதிமுறைகளைப் பின்பற்றுபவர் என்ற காரணத்தால்தான் அந்த அறிவிப்பினைச் செய்திருப்பார் என்று எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
'ஐந்தாவது முறையாக என் தலைமையில் இந்த அரசு ஏற்பட்ட பிறகு இதுவரை 703 அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதிலே 522 அறிவிப்புகள் மீது பணிகள் முடிவுற்றுவிட்டன. அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருபவை 126. ஆணைகள் வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் 55. அதாவது 8 சதவிகித அறிவிப்புகள் நிலுவையிலே உள்ளன.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்படி இதுவரை பதிவு செய்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 45 ஆயிரத்து 133. விநியோகிக்க வழங்கப்பட்ட காப்பீடு அட்டைகளின் எண்ணிக்கை 53 லட்சத்து 24 ஆயிரத்து 56. இதில் விநியோகிக்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 760.
சிகிச்சை கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 478. இதிலே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 25 பேர். இவர்களுக்கு சிகிச்சைக்காக இதுவரை விடுவிக்கப்பட்ட தொகை 48 கோடியே 78 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்' என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.