தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ராவ் 8வது நாளாக உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனி தெலுங்கானா கோரி 8வது நாளாக மருத்துமனையில் இருந்தபடியே உண்ணாவிரதம் இருந்துவரும் டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இதற்கிடையே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அழைப்பு விடுத்துள்ள பந்த் காரணமாக தெலுங்கானா பிராந்தியமே செயலிழந்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் ஒரு 48 மணி நேர பந்த்துக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அழைப்பு விடுத்தது.

இதையடுத்தே நேற்றே கரீம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் வேறு அனுசரிக்கப்பட்டதால் ஹைதராபாத்தில் பெரும் பதட்ட நிலை காணப்பட்டது. நகரமே ஸ்தம்பித்தது போல காணப்பட்டது.

இந்த நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் எல்.பி. நகர் பகுதியில் ஹோட்டல் ஒன்றை தீவைத்து எரித்தனர். ராம்நாத்பூர் என்ற இடத்தில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகியவற்றின் இரு ஏடிஎம்களை உடைத்து சேதப்படுத்தினர்.

இதற்கிடையே, வாரங்கல் மாவட்டத்தில் அணையிலிருந்து குதித்து ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி இவ்வாறு அவர் செய்தார்.

கரீம் நகர் மாவட்டத்தில், ஹைதராபாத் செல்லும் பாக்யநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து நிறுத்தினர். பல இடங்களில் சாலைகளை மறித்தும் போக்குவரத்தைத் தடுத்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ராவ்...

இதற்கிடையே சந்திரசேகர ராவின் உடல் நிலை மோசமடைந்து வருவதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் கோமாவுக்குப் போய் விட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று நிம்ஸ் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு தொடர்ந்து குளுக்கோஸ் மற்றும் வைட்டமின் சத்து திரவ உணவாக மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி வழங்கி வழங்கி வருகின்றனர்.

இன்று காலை ராவின் உடல்நிலை குறித்து பரவிய வதந்தியால் மருத்துமனை பகுதியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த பிக் பஜார் ஷோரூம் உட்பட பல்வேறு நிறுவனங்களின் முகப்பு கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதற்கிடையே, ஹைதராபாத் உட்பட 10 மாவட்டங்களில் டி.ஆர்.எஸ் கட்சி 48 மணிநேர பந்த் அறிவித்திருந்தது. இதனால் நேற்று இரவே பல கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கத் துவங்கிவிட்டன. பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் வழிந்தது. காய்கறிகள் நேற்று இரவிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கூடவே பாபர் மசூதி இடிப்பு நாள், கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இதனால், ஐதராபாத் உட்பட பல இடங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

சோனியா தலையிட கோரிக்கை:

டி.ஆர்.எஸ் தலைவர் பிடிவாதமாக நடத்தி வரும் போராட்டத்தால் ஆந்திராவில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. எனவே காங்கிரஸ் தலைவர் சோனியா இதில் தலையிட்டாக வேண்டும் எனக் கோரி ஆந்திர அமைச்சர்கள் அவசர கடிதம் அனுப்பியுள்ளனர்.

இவ்விவகாரத்தை முதல்வர் ரோசய்யா கையாளும் விதத்தைப் பார்த்து அதிருப்து அடைந்துள்ள மறைந்த ஒய்.எஸ்.ஆரின் ஆதரவாளர்கள், உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி அலுவலகத்தில் கூடி, நிலைமை கைமீறுவதற்கும் மத்திய அரசு இதில் தலையி்ட்டாக வேண்டும் என சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வன்முறையாளர்களுக்கு ரோசய்யா எச்சரிக்கை...

இந்த நிலையில், வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் உள்ளிட்டோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரோசய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராவ் மீதான வழக்கு வாபஸ்...

இதற்கிடையே, சந்திரசேகர ராவ் மீதான வழக்கை ஆந்திர அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது.

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பான போராட்டத்தையடுத்து ராவ் மீது நவம்பர் 29ம் தேதியன்று வழக்குப் பதிவு செய்தது ஆந்திர அரசு. தற்போது இதை அரசு வாபஸ் பெற்றுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், தனி தெலுங்கானா குறித்து டெல்லியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+