லண்டன்: அனுமயின்றி ஒலிம்பிக் பணி-32 இந்தியர்கள் கைது
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்காக மைதானங்கள் அமைப்பது, கட்டிடங்கள் கட்டுவது போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் பணியாற்ற பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்களை லண்டனைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தேர்வு செய்துள்ளன.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்களில் பலர் சட்ட விரோதமாக வந்துள்ளது தெரிய வந்தது. எனவே, அவர்கள் விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட தஸ்தாவேஜூகளை இங்கிலாந்து எல்லை பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்தது.
இந்த சோதனையின்போது, 93 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து இங்கிலாந்து எல்லை ஏஜென்சி அதிகாரிகள் கூறுகையில், சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தப்பட்டதில் 32 இந்தியர்கள், 12 நைஜீரியர்கள், 7 உக்ரைனியர்கள் சிக்கினர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரை 93 பேர் இவ்வாறு கைதாகியுள்ளனர். இவர்களில் 41 பேர் போலியான பாஸ்போர்ட்கள் அல்லது ஆவணங்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர் என்றனர்.
இந்த அமைப்பின் முதுநிலை இயக்குநர் டோனி ஸ்மித் கூறுகையில், ஒலிம்பிக் தொடர்பான வேலைகள் நடைபெறும் இடங்களில் நிரந்தரமாக அதிகாரிகளை வைத்து கண்காணித்து வருகிறோம்.
அங்கு வேலை பார்ப்போரின் அடையாளச் சான்றுகள் தினசரி பரிசோதிக்கப்படும். சட்டவிரோதமாக யாரும் பணியாற்றுவதை அனுமதிக்க மாட்டோம்.
வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களுக்கும் இதுகுறித்து கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.