இஸ்ரேல் ராணுவ உயர்மட்ட குழு இந்தியா வருகை
டெல்லி: இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி தலைமையிலான உயர்மட்டக் குழு இந்தியா வந்துள்ளது. இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு அதிகளவில் ஆயுதங்கள் சப்ளை செய்யும் நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த ராணுவ உறவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி கபி ஆஷ்கெனாசி தலைமையில் உயர்மட்ட குழுவினர் டெல்லி வந்துள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் மற்றும் கடற்படை, விமானப் படை தளபதிகளையும் அவர்கள் சந்தி்த்து பேசுகின்றனர்.
இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, கூட்டு பயிற்சி நடவடிக்கைகள், பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என தெரிகிறது.