கருணாநிதி ஓய்வு பெறக்கூடாது-ஸ்டாலின்
சென்னை: ஓய்வுக்கே ஓய்வு கொடுக்கும் முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொது மக்களில் ஒருவரான இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் தெரிவி்த்திருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்ய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் எழும்பூர் பகுதிக்கு வந்தார்.
சிந்தாதிரிப்பேட்டை ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், முதல்வரின் ஓய்வு திட்டம் குறித்து கேட்டதற்கு,
கலைஞர் ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் அவர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம் என்றார்.
அடுத்த முதல்வராக நீங்கள் தயாராகி விட்டீர்களா என்று கேட்டதற்கு, எனக்கு அந்தத் தகுதி உள்ளதா.. நான் தயாராகிவிட்டேனா என்பதை கலைஞரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையி்ல்,
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூவம் ஆறு சீரமைப்பு திட்டம் முதல்வரின் கனவு திட்டம் ஆகும். சிங்கப்பூரில் 12 கிமீ நீள நதியை புனரமைத்து அழகுபடுத்தியிருப்பது போல கூவம் நதியை தூய்மைப்படுத்தும் பணியையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் கட்டளையிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மாற்று இடங்கள் வழங்கப்படும். இதுவரை 10,000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நதியை தூய்மைப்படுத்த 10 ஆண்டுகள் ஆகி உள்ளது. கூவம் நதியை 10 ஆண்டுக்கு உள்ளாகவே சிங்கப்பூர் நதியை விட சிறப்பாக சீரமைத்து அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கூவம் நதி சீரமைப்பு பணியானது ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றங்கரைகளை அழகுபடுத்துதல், ஆற்றில் கழிவுநீர், திடக்கழிவு ஆகியவை சேராத வகையில் தடுத்தல், ஆற்றில் உள்ள சகதியை வெளியேற்றி கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.1,200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.