கேரளாவின் புதிய அணை ஆய்வுப் பணிக்குத் திடீர் தடை
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் ஆய்வுக்கு பெரியாறு புலிகள் சரணாலயம் திடீர் தடை விதித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ஆய்வுப்பணிகளை கேரள நீர்ப்பாசனத்துறை தொடங்கியது.
அணையின் கீழ்ப்பகுதியில் சுமார் 400 மீட்டர் தூரத்தில் 500 மீட்டர் நீளம் 50 மீட்டர் அகலத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
கேரள அரசின் செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், உதவிப் பொறியாளர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கின.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் அனுமதியின் பேரில் ஆய்வைத் தொடங்குவதாக கேரள அரசு கூறியது. இதை ஜெய்ராம் ரமேஷும் ஒத்துக் கொண்டார்.
மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு. அங்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உத்தரவு வந்தது.
இந்தநிலையில், அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்துவதற்கு வனத்துறை திடீரென தடை விதித்துள்ளது. ஆய்வு செய்யுமிடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அப்பகுதியை வன விலங்குகளின் பாதுகாப்புப் பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வன விலங்குப் பாதுகாப்புத்துறையிடமிருந்தும், வனத்துறையிடமிருந்தும் எழுத்து மூலமான அனுமதியை கேரள நீர்ப்பாசனத்துறை பெறவில்லை. கேரள வனத்துறையின் எழுத்து மூலமான உத்தரவு எங்களுக்குக் கிடைத்தால் மட்டுமே ஆய்வு நடத்த அனுமதிக்க முடியும் என பெரியாறு புலிகள் சரணாலய உதவி இயக்குநர் ஜோசப் கூறியுள்ளார்.
ஆனால், வனத்துறை தங்களைப் பணி செய்ய விடாமல் தடுப்பதாக கேரள நீர்வள ஆராய்ச்சி மைய முதன்மைப் பொறியாளர் ராதாமணி கேரள அரசுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
கேரள வனத்துறை அனுமதி அளிக்காததையடுத்து தற்போது அணைகட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications