கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம்-அரசு முடிவு
டெல்லி: கற்பழிப்புக்குள்ளான பெண்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் அளித்த எழுத்து மூலமான பதிலில், கற்பழிப்புக்கு உள்ளான பெண்களுக்கு நிவாரண உதவி அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும்.
கற்பழிப்புக் குற்றங்கள் அனைத்தும் 2008-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட கிரிமினல் நடைமுறைச் சட்டத்தின் (சட்ட திருத்தம்) கீழ் விசாரிக்கப்படும்.
இதன்படி கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை தொடங்கிய 2 மாதத்துக்குள் கற்பழிப்புக் குற்றங்கள் மீது விசாரணை நடத்தி முடிக்கப்படும்.
விதவைப் பெண்கள், தனியே வாழும் பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றோருக்கு உதவி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி 3 கோடியே 72 லட்சத்து 89 ஆயிரத்து 729 விதவைகளுக்கும், 23 லட்சத்து 42 ஆயிரத்து 930 விவாகரத்து பெற்ற பெண்கள், தனித்து வாழும் பெண்கள் ஆகியோருக்கு உதவி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிராமங்களில் தனித்த வாழும் பெண்களுக்கு, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது.
இந்திரகாந்தி தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டுக் கீழே வாழும் பெண்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. விதவைகள் உள்ளிட்ட 40 முதல் 64 வயது பெண்களும் இந்த உதவித் தொகை பெறும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்துப்பட்டுள்ளது.
சொத்துகள் இல்லாத மற்றும் ஏழைப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டங்களையும் மத்திய அரசு நடத்தி வருகிறது என்று தெரிவித்தார் தீரத்.
500 முறை கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு..
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் 500 முறை கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரு சிறுமி, 1974ம் ஆண்டிலிருந்து வளர்ப்புப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டாள்.
அப்போது அவளுக்கு ஐந்து வயது. அன்றிலிருந்து அவளது 16 வயது வரை 10 ஆண்டுகளில் அவள் 500 தடவை கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். அந்த வளர்ப்புப் பெற்றோரின் மருமகன் தான் அந்தக் கொடுமையைச் செய்தவன்.
விவரம் அறிந்த பிறகு அந்தப் பெண், இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து, தனக்கு ஏழு இழப்பீடுகள் தரவேண்டும் என்று கோரியிருந்தார்.
பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சட்டத்தின் அடிப்படையில் ஒரு தடவைதான் இழப்பீடு வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து அப்பெண் அப்பீல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் ரோத்மென் அளித்த தீர்ப்பில், தீர்ப்பாயம் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதால் பகுத்தறிவுக்கு மாறாக மனம்போன போக்கில் தீர்ப்பளித்துள்ளது.
அந்தப் பெண் வளர்ப்புப் பெற்றோரிடம் இருந்த அந்த 10 ஆண்டுகளில், குறைந்தது 500 தடவையாவது பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்.
குறிப்பிட்ட சட்டப்பிரிவின் படி அவர் கோரியுள்ள இழப்பீட்டை அவருக்கு வழங்கலாம் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அப்பெண்ணுக்கு நிவாரணத் தொகையாக அதிகபட்சம் ரூ. 22 லட்சம் வரை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications