ஜெ. சிறுதாவூர் பங்களா ஆக்கிரமிப்பு-விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
சென்னை அருகே உள்ள சிறுதாவூரில் ஆடம்பர பங்களா உள்ளது. இது ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என்று முன்பு சர்ச்சை எழுந்தது. பின்னர் சித்ரா, இளவரசி ஆகியோருக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டது. இவர்களில் இளவரசி, சசிகலாவின் உறவினர் ஆவார்.
இந்த நிலம் அண்ணா காலத்தில் தலித்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கப்பட்டதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கூறியது.
இதையடுத்து இதுகுறித்து விவாதிக்க நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் கமிட்டி ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிஷன் தனது விசாரணையை கடந்த மாதமே முடித்து விட்டது.
இந்த நிலையில் கமிஷனின் விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினர் சித்ரா மற்றும் இளவரசி ஆகியோர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட முறை சட்டவிரோதமானது. எனவே இந்த கமிஷன் அமைக்கப்பட்டது செல்லாது. எனவே இந்த கமிஷன் அறிக்கையை தமிழக அரசிடம் அளிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரினர்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு முறையாகத்தான் கமிஷன் அமைக்கப்பட்டது. எனவே கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், சித்ரா, இளவரசி ஆகியோரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது. மேலும், இந்த அறிக்கையை நீதிபதி சிவசுப்ரமணியம் கமிஷன் தமிழக அரசிடம் அளிக்கலாம் எனவும் அனுமதி அளித்தது.
மேலும், விசாரணைக் கமிஷன் அறிக்கையை அளிக்க கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று மனுதாரர்களின் வக்கீலையும் நீதிபதிகள் சாடினர்.
53 ஏக்கர் தலித் நிலம் தவிர, 31.23 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.