பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்கள் முன் ஷூட்டிங்: போக்குவரத்து பாதிப்பு-மக்கள் அவதி
சென்னை: சென்னையில் பள்ளிக்கூடத்திற்கு முன்பு சினிமா பட ஷூட்டிங் நடந்ததால் பள்ளிப் பிள்ளைகள் படிப்பதை விட்டு விட்டு வெளியேறி ஷூட்டிங் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூரிலும் இதேபோல அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள பகுதியில் நடந்த ஷூட்டிங்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சினிமா பட ஷூட்டிங்குகள் சமீப காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. மக்களுக்காக எடுக்கப்படும் சினிமாக்கள் என்பது போய், மக்களை வதைத்து எடுக்கப்படும் படங்களாக இந்த ஷூட்டிங்குகள் மாறி வருகின்றன.
சமீபத்தில் எந்திரன் படத்தின் ஷூட்டிங்கால் தென் சென்னை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையம் செல்லும் முக்கியப் பாதையில் அமைந்துள்ள கத்திப்பாரா பாலத்தின் மீது பல மணி நேரம் நடந்த ஷூட்டிங்கால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து இனிமேல் பகல் நேரத்தில் இந்த இடத்தி்ல் ஷூட்டிங் நடத்தாமல் பார்த்துக் கொள்வதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பகல் நேரத்தில் ஷூட்டிங் அவஸ்தைகள் தொடருவது தொடர்கதையாகியுள்ளது.
சென்னை கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர், கத்திவாக்கம் சாலையில், நேற்று மூலக் கொத்தளம் முருகன் என்ற சினிமா படப்பிடிப்பு நடந்தது.
ஏற்கெனவே அப்பகுதியில் காக்ரின் பேசின் சாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு சரியான வழியின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு நடந்ததால், பொதுமக்கள் டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதை விட கொடுமையாக படப்பிடிப்பு நடந்த இடம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் வாசல் ஆகும். அங்கு வைத்து சண்டைக் காட்சியை ஷூட் செய்தனர்.
இதனால் பள்ளி மாணவ, மாணவியர் வகுப்புகளுக்குப் போகாமல் வெளியேறி வந்து பள்ளியின் மாடிகளில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர்.
இதனால் வகுப்புகள் பாதிக்கப்பட்டன. அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்த இந்த படப்பிடிப்பால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்து, முகம் சுளித்தனர்.
கடலூரில் 'ராமரால்' சிக்கல்...
இதேபோல, கடலூரிலும் சினிமாப் படப்பிடிப்பால் மக்களுக்கு அவஸ்தை ஏற்பட்டது.
பள்ளி, கல்லூரி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள, சப் - ஜெயில் ரோட்டில், நேற்று காலை முதல் ராமர் என்ற சினிமா படப்பிடிப்பு நடந்தது.
இதனை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது, வீட்டிற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
மதிய ஷிப்டிற்கு வந்த கல்லூரி மாணவியர் மற்றும் அவர்களை ஏற்றி வந்த வாகனங்களும் அவ்வழியே செல்ல முடியவில்லை.
மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் படப்பிடிப்புகளை நடத்த உரியவர்கள் அனுமதி தந்தால் நல்லது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.