செல்போன்-60 கல்லூரி மாணவிகள் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை மகளிர் கல்லூரியில் செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி 60 மாணவிகள் வகுப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.எம். படிக்கும் மாணவிகள் சிலர் நூலக வகுப்பு நேரத்தில் செல்போனில் எப்.எம்.ரேடியோ பாட்டு கேட்டபடி நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அருகில் உள்ள வகுப்பு ஆசிரியை அளித்த புகாரின் பேரில் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரு வாரம் கல்லூரிக்கு வரவேண்டாம் என கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
சம்பவம் நடந்த நேற்றுமுன்தினம் தாங்கள் கல்லூரியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நேற்று காலை வழக்கம் போல அந்த பி.பி.எம். மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் அவர்களை வகுப்புக்குள் வர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த மாணவிகளில் பலர் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பெற்றோர் பலர் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். கல்லூரி செயலாளர் லட்சுமியை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. 3 மணிநேர அலைகழிப்புக்கு பின்னர் ஒவ்வொரு பெற்றோராக சந்திக்க வரும்படி செயலாளர் லட்சுமி அழைத்து பேசி அனுப்பினார்.
வெளியே வந்த பெற்றோர் ஒருவர் கூறுகையில், 'நான் ஒரு அரசு ஊழியர். எனது மகள் இந்த கல்லூரியில் படிக்கிறார். செல்போன் வைத்திருக்கவில்லை. ஆனால் அவர் ஒருவாரத்திற்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். யாரோ 2 மாணவிகள் செல்போனில் பேசியதற்காக அனைத்து மாணவிகளும் சஸ்பெண்டு என்றால் இது காட்டு தர்பாரா?
வகுப்புக்கு வரலாம் ஆனால் ஆசிரியை வகுப்பு நடத்தமாட்டார் என்று கல்லூரி செயலாளர் கூறுகிறார். தப்பு செய்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தவறே செய்யாத மாணவிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல' என்று கொந்தளித்தார்.
இதற்கிடையே, இதுகுறித்து செயதி சேகரிக்க அங்கு சென்ற தனியார் 'டிவி' ஊழியர்களுக்கும், கல்லூரி பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் செக்யூரிட்டி பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்த விவகாரம் குறித்து கல்லூரி செயலாளர் லட்சுமி கூறுகையில், 'எந்த ஒரு மாணவியும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. 60 மாணவிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக கூறும் செய்தி தவறு. கல்லூரியில் நிறைய மாணவிகள் படிக்கிறார்கள். சில மாணவிகள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications