தமிழக-கேரள போக்குவரத்தை தடுப்போம்: வைகோ எச்சரிக்கை

பொள்ளாச்சியில் ம.தி.மு.க விவசாய அணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
நதிநீர் இணைப்பு விஷயத்தில், குழப்பமான செய்திகள் தான் வெளிவந்த வண்ணம் உள்ளது. கங்கை, காவிரியை இணைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சராக இருந்த ராவ் வலியுறுத்தியுள்ளார். அந்த திட்டத்திற்கு, ஏராளமான பொருள் செலவாகும் என்பதால், பரிசீலனையில் மட்டுமே இருந்தது.
அதனால், தென்னக நதிகளை இணைக்க ம.தி.மு.க சார்பில் தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நான் கொண்டு வந்தேன். கடந்த 2004ம் ஆண்டில் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்தை சேர்க்க போராடினேன். அப்போது, கருணாநிதிக்கு நதிகள் இருப்பது கூட தெரியாது. அந்த திட்டமும் கூட தெரியாது.
முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில், அதன் பின்விளைவை உணராமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. முல்லைப் பெரியார் அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில், புதிய அணைக்கான அலுவலகம் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை வனப்பகுதியில் குவித்துள்ளது.
அணை கட்டுவதற்காக வெடி வைத்து பாறைகளை உடைக்கும் போது, ஏற்படும் அதிர்வால், முல்லை பெரியார் அணைக்கு ஆபத்து ஏற்படும். அதையே காரணமாக கூறி, முல்லைப் பெரியார் அணையை கேரள அரசே உடைத்து விடும்.
முல்லைப் பெரியார் அணையை பாதுகாக்கும் நோக்கத்திலும், தமிழக அரசின் செயல்பாடற்ற நிலையை உணர்த்தும் வகையிலும், வரும் 29ம் தேதி தமிழகத்தில் இருந்து கம்பம் வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் மறிக்கும் போராட்டம் நடைபெறும்.
இதற்கு, கேரளா அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் வாகனங்களை மறித்து பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்போம்' என்றார்.












Click it and Unblock the Notifications