நள்ளிரவில் வாகனங்களுக்கு தீ வைக்கும் மர்மகும்பல்
சென்னை: சென்னையில் நள்ளிரவில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் டிராவல்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் இரவு நேரங்களில் சாலையோரமாக ஏராளமான மினி வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிந்த ஒரு மினி வேன், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை திடீரென தீப் பிடித்து எரிந்தன.
எழும்பூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அண்ணா சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மோட்டார் சைக்கிள்கள், வேன் ஆகியவற்றை மர்ம கும்பல் திட்டமிட்டு தீ வைத்து எரித்திருப்பது தெரிய வந்தது. தீ வைத்தவர்கள் யார்? எதற்காக தீ வைத்து கொளுத்தினார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. அண்ணா சாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.