நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை
சென்னை: சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இவற்றில் பல்வேறு பதவிகளில் உள்ள உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு நடத்த சிபிஐ முடிவு செய்தது. இதன்படி, நேற்று தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சிலரின் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி ரெய்டுகளை நடத்தியது.
சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை சி.பி.ஐ தற்போது வெளியிடவில்லை. ரகசியமாகவே வைத்திருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகையில், 'சோதனைகள் இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகு தான் எல்லாம் தெளிவாகும்.
மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் சிறப்பு சோதனைகளை நடத்த சி.பி.ஐ ஊழல் தடுப்புப் பிரிவு முடிவு செய்தது. இதன்படி எல்லா துறைகளிலும் தேவையான அளவுக்கு விசாரணை மற்றும் சோதனைகளை ஒவ்வொன்றாக நடத்த உள்ளோம். தனித்தனியாக கவனம் செலுத்தினால் தான் பெருமளவிலான முறைகேடுகளை அம்பலப்படுத்த முடியும்.
தற்போது நெடுஞ்சாலைத் துறையில் இது நடந்து கொண்டிருக்கிறது' என்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால் பல அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications