மும்பை தாக்குதலில் தொடர்பில்லை - குற்றச்சாட்டை மறுக்கும் ஹெட்லி
சிகாகோ: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமெரிக்க கோர்ட்டில் டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டங்கள் தீட்டியது தொடர்பாக அமெரிக்காவில் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டார் ஹெட்லி. அவருடன் தஹவூர் ஹூசேன் ராணாவும் கைது செய்யப்பட்டார்.
தற்போது ஹெட்லி மீது மும்பைத் தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டியுள்ளது எப்.பி.ஐ. இதுதொடர்பாக சிகாகோ கோர்ட்டில் ஹெட்லி மீது மொத்தம் 12 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக சிகாகோ நீதிமன்றத்தில் ஹெட்லி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்ற சம்பிரதாயப்படி குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அப்போது ஹெட்லி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இருதரப்பு கருத்துக்களை கேட்டபின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹெட்லி தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் ஜான் தீஸ் நிருபர்களிடம் கூறுகையில், 'ஹெட்லி தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அடுத்து வரும் வாரங்களில் எங்கள் தரப்பு நியாயத்துக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்போம்' என்றார்.
மும்பை சதி திட்டம் தொடர்பாக ஹெட்லியை இந்திய அதிகாரிகள் அணுகமுடியுமா என்று கேட்டபோது, 'அவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால், அப்போது அதுபற்றி யோசிப்போம்' என்றார் தீஸ்.