திமுகவுக்கு ஆதரவாக பாமகவினர் தீவிரப் பிரசாரம்!!
சென்னை: வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாமக முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவித்தது. மேலும், இந்த்த தேர்தலில் யாருக்கும் எங்களது ஆதரவு இல்லை, பாமகவினர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கும் 49 ஓ விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் பாமக தலைமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வந்தவாசி தொகுதியில், பாமகவைச் சேர்ந்த பேராசிரியர் பொன்னுச்சாமி, பெரணமுல்லூர் எம்எல்ஏ எதிரொலி மணியன் ஆகியோர் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முக்கியக் காரணம், நேற்று பாமக தலைமை பாமகவினரிடம் ஒரு வெளிப்படையான உத்தரவு போட்டுள்ளது. அதாவது, 49 ஓ விதியை பயன்படுத்த வேண்டாம். தேர்தலில் வாக்களியுங்கள், அதேசமயம், தேமுதிகவுக்கோ, அதிமுகவுக்கோ ஓட்டு போடக் கூடாத. மற்றப்படி யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்று வந்தவாசி தொகுதி பாமகவினருக்கு உத்தரவு போயுள்ளதாம்.
இதையடுத்து பாமகவினர் திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பதாக தெரிகிறது.
வந்தவாசி தொகுதி தனித் தொகுதி என்பதால் தலித் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர் பொன்னுச்சாமி களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வன்னியர்கள் அதிகம் உள்ள வந்தவாசி தொகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்று 21 ஆயிரம் ஓட்டுகளை பாமக வாக்கியது. அதேபோல் அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலிலும் பாமக தனித்து நின்று 25 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றது.
இத்தொகுதியில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர் வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் திமுகவோ, அதிமுகவோ, பாமகவின் வாக்கு வங்கி குறித்து கவலைப்படவும் இல்லை, ஆதரவு கேட்கவும் இல்லை. இதையடுத்துதான் பாமகவினர் ஓ போட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் தற்போது திடீரென திமுகவுக்கு ஆதரவான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.