ராகுல் காந்தி சொல்லிட்டாராம்.. இல.கணேசன்
சென்னை: ராகுல் காந்தி சொல்லிவிட்டார் என்பதற்காக ஆராயாமல் அவசரப்பட்டு நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்'' என்பது மகாகவி பாரதி தீர்க்கதரிசனமாக பாடிய வரிகள். வங்கத்தில் என்பது வங்கப் பகுதியில் என்று மாத்திரம் கொள்ளாமல் வங்கக் கடலில் பாயும் மிகுதியான நீரால் என்றும் பொருள் கொள்ளல் வேண்டும்.
இது ஒரு கவிஞனது கற்பனை அல்ல. இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன என பல்லாண்டு காலமாக பல அறிஞர்கள் ஆய்வு செய்து ஆதாரத்துடன் வலியுறுத்தியுள்ளார்கள். நதிநீர் இணைப்பை நடைமுறைப்படுத்துவது என்பதை கொள்கைரீதியாக ஏற்ற அரசு வாஜ்பாய் அவர்களது அரசு.
அதற்காக சுரேஷ் பிரபு தலைமையில் அமைத்த குழு விரிவாக ஆய்வு செய்து விந்தியத்துக்கு வடக்கே உள்ள நதிகளை இணைக்கும் திட்டமும் சாத்தியமானவை என அறிக்கை தந்தது.
அன்றைய பிரதமர் வாஜ்பாய் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆகஸ்டு 15ம் தேதி நதிநீர் இணைப்புக்கு அடிக்கல் நாட்டுவேன் என உறுதி தந்தார்.
தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக போனதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஆட்சி அமைந்திருந்தால் எப்படி தங்க நாற்கரசாலைகளை நாம் கண்ணால் கண்டு பயன் பெறுகிறோமோ அது போல தமிழக நதிகளில் நீர் பெருகி ஓடுவதையும் அனுபவித்திருக்க முடியும்.
இந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு நாடாளுமன்ற அவையில் அறிவித்துவிட்டது. சாத்தியக் கூறு இல்லை என்றும் செலவு அதிகமாகும் என்றும் பொறுப்பற்ற முறையில் சொல்லி நிராகரித்துள்ளது. இதற்கு உண்மையான காரணம் என்ன?.
தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு நிருபரது கேள்விக்கு ராகுல் காந்தி பதில் சொல்லிவிட்டார். அவர் ஆராயாமல் அவசரப்பட்டு சொன்ன கருத்தை அரைகுறை மனதுடன் பின்னர் பிரதமர் வழிமொழிந்தார். இன்று அது அதிகாரபூர்வமாக ஆகிவிட்டது.
தென்னக நதிநீர் இணைப்பில் அதிகம் பயன்பெறப்போவது தமிழகம் தான். ஆராய்ச்சி செய்து அறிஞர்கள் தந்த பரிந்துரையை துச்சமாக மதித்து அவசர கோலத்தில் அறியாமையில் ஆளும் கட்சியின் ராகுல் காந்தி சொன்ன கருத்துக்கே மதிப்பு தரும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் கணேசன்.