சுரங்க ஊழல்-ரெட்டிகள் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு
பெல்லாரி: கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ரெட்டி சகோதரர்களுக்குச் சொந்தமான ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்தில் உள்ள கர்நாடக அமைச்சரும், சகோதரர்களில் ஒருவருமான ஜனார்த்தன ரெட்டியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சட்டவிரோதமான முறையில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக ரெட்டி சகோதரர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஓபுலாபுரம் சுரங்க நிறுவன அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
11 பேர் கொண்ட சிபிஐ குழு இதற்காக புதன்கிழமை இரவு பெல்லாரி வந்தது. பின்னர் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் உள்ள ஹவம்பாவி என்ற இடத்திற்குச் சென்ற அவர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் ஜனார்த்தன ரெட்டியின் வீட்டுக்கும் சிபிஐ குழு சென்றது. ரெட்டியின் அலுவலகத்தில் நடந்த சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை.
ஆந்திர மாநில அரசின் கோரிக்கைக்கேற்ப ரெட்டி சகோதரர்களின் மோசடி குறித்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தையொட்டியுள்ள கர்நாடக எல்லைப் பகுதியில் ரெட்டி சகோதர்ரகள் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவில் இவர்களுக்கு 3 சுரங்க உரிமங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.