வரதராஜன், நெஞ்சார பொய் சொல்ல வேண்டாம்: கருணாநிதி
திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வரதராசன் திமுக ஆட்சியில் அருந்ததிய மக்களுக்கு அறிவிக்கப்பட்ட மூன்று சதவிகித இட ஒதுக்கீடு அமலாகவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த மூன்று சதவிகித உள் ஒதுக்கீட்டால் அருந்ததிய மாணவர்கள் எத்தனை பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை நான் புள்ளி விவரத்தோடு பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
உதாரணமாக மருத்துவக் கல்லூரிகளில் 56 அருந்ததியர் வகுப்பு மாணவர்களும், பொறியியல் கல்லூரிகளில் 1,165 அருந்ததியர் வகுப்பு மாணவர்களும் அனுமதி பெற்று பயனடைந்துள்ளனர்.
அது மாத்திரமல்ல; அருந்ததிய சமுதாய மாணவர்கள் உயர் கல்வி பெற்றிட உதவியாக நான்; ஒரு திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியதற்காக எனக்கு அளிக்கப்பட்ட 50 லட்ச ரூபாயுடன், எனது சொந்த நிதியிலிருந்து 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து, 5.12.2009 அன்று 1,221 அருந்ததிய மாணவர்களுக்கு மொத்தமாக 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை வழங்கினேன்.
இது அனைத்து ஏடுகளிலும் செய்தியாக வந்துள்ளது. அதைப் படிக்காமல், அல்லது படித்து விட்டு வெளியே சொல்ல மனமில்லாமல் தோழர் வரதராசன் அவர்கள் ''நெஞ்சார பொய் தன்னை சொல்ல வேண்டாம்'' என்ற பழைய நீதி உரையையும் புறக்கணித்து விட்டு பேசுகிறார் என்றால் இதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்று கூறியுள்ளார் கருணாநிதி.