தெலுங்கானா தலைநகர்-உள்துறை செயலாளர் பல்டி!
இது தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசித்துத் தான் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையல்ல. புதிய மாநிலத்துக்கு தெலுங்கானா பகுதியில் உள்ள ஹைதராபாத் தான் தலைநகராக இருக்கும்.
உண்மை நிலைமையை மக்கள் உணரும்போது எல்லா போராட்டங்களும் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார்.
அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து மீண்டும் நிருபர்களை சந்தித்த பிள்ளை, தெலுங்கானா தலைநகர் விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து அனைத்துத் தரப்பினரும் பேசிய பின்னரே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார்.
தெலுங்கானா தீர்மானம்-ரோசய்யா மறுப்பு:
இந் நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருவோம் என்று கூறியிருந்த முதல்வர் ரோசய்யாவும் பல்டி அடித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களையடுத்து, தனி மாநிலம் தொடர்பாக சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வரப்படாது என்று அறிவித்துள்ளார்.
மேலும் தனி தெலுங்கானாவை எதிர்த்து பதவிகளை ராஜினாமா செய்துள்ள எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் அவற்றை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தில் டிஆர்எஸ் வெற்றி பேரணி:
இந் நிலையில் ஹைதராபாத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் வெற்றி பேரணி நடத்தப்படவுள்ளது.
இந்த பேரணிக்கு அக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ்வின் மகன் தலைமை தாங்கவுள்ளார். பேரணியை சந்திரசேகர ராவ் கையசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.
காங் எம்.பி. உண்ணாவிரதம்:
இதற்கிடையே தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
இந் நிலையில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாகும்வரை தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
20 அமைச்சர்கள் ராஜினாமா:
இந் நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 20 ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே 120 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அரசு இருக்கிறதா இல்லையா என்ற அரசியல் சட்ட சி்க்கல் உருவாகியுள்ள நிலையில் இவர்களும் ராஜினாமா செய்துள்ளதால் ஆந்திர அரசு நீடிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா செய்வாரா சிரஞ்சீவி?
இந் நிலையில் தனி தெலுங்கானாவுக்கு எதிராக ராயலசீமா-கடலோர ஆந்திர எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் ராயலசீமா பகுதியில் உள்ள திருப்பதி தொகுதி எம்எல்ஏவான நடிகர் சிரஞ்சீவி தனது பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை.
அவரது பிரஜா ராஜ்யம் எம்எல்ஏக்கள் பலரும் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் சிரஞ்சீவியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆனால், இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.