ஆந்திராவில் தொடர்ந்து கலவரம்: தமிழக பஸ்கள் நிறுத்தம்-திருப்பதியில் கூட்டம் குறைந்தது!

ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் பல இடங்களில் இன்னும் பந்த் நடத்தப்பட்டு வருகிறது.
சித்தூர், திருப்பதி, அனந்தபுரம், கர்னூல், விஜயவாடா, நெல்லூர் உள்ளிட்ட நகரங்களில் 40ம் மேற்பட்ட பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான வாகனங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான இடங்களில் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
திருப்பதியில் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 2 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. திருப்பதி மேற்கு ரயில் நிலையத்துக்கும் ஒரு கும்பல் தீ வைத்தது.
திருப்பதியில் கூட்டம் குறைந்தது:
இதனால் திருப்பதி-வெளியூர்களுக்கு இடையே போக்குவரத்தும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.
திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக விடுதி மாணவிகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல மாணவிகள் மயக்கமடைந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தமிழக பேருந்துகள் நிறுத்தம்:
முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. மேலும் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த பேருந்துகளும் திரும்பிச் செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீகாளகஸ்தியில் 2 அரசு பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்களும் ஓடவில்லை.
சாலைகளில் மரங்களை வெட்டி போட்டதாலும், டயர்களை போட்டு கொளுத்தியதாலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடப்பா மாவட்டத்தில் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடப்பதால் ஆந்திரா வழியாகச் செல்லும் பல ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பாதுகாப்புடன் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் குதித்துள்ளனர். விசாகப்பட்டினம் ஆந்திரா பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
தபால் அலுவலகங்கள் எரிப்பு:
அதே போல பல இடங்களில் தபால் அலுவலகங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளின் தொண்டர்களும் சாலை மறியல், கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம் குப்பம், அனந்தப்பூர் மாவட்டம் குப்பம் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்ததால், அந்த வழியாக செல்லும் காலை ரயில்கள் அனைத்தும் தாமதமாக சென்றன.
மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் ரோசைய்யாவின் உருவ பொம்மைகளும் ஆங்காங்கே எரிக்கப்பட்டு வருகின்றன.
அனந்தப்பூர் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட பதற்றம் மிகுந்த பகுதிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பல மாவட்டங்களில் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் அடிதடி:
ராயசீமா, கடலோர ஆந்திராவின் பல்வேறு நீதிமன்றங்களிலும் தெலுங்கானா ஆதரவு, எதிர்ப்பு வழக்கறிஞர்களுக்கு இடையே கைகலப்பும நடந்துள்ளது.
ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் அடித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications