திருவாரூர் கோவில் ரூ.5 கோடி மரகத லிங்கம் மீட்பு
சென்னை: திருவாரூர் அருகேயுள்ள கோவிலில் இருந்து 17 ஆண்டுகளுக்கு முன் திருட்டு போன ரூ.5 கோடி மதிப்புள்ள மேலும் ஒரு மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்லது.
இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. திலகவதி கூறியதாவது:
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 3 கோவில்களில் விலை மதிப்புள்ள மரகத லிங்கங்கள் திருட்டு போய்விட்டன. மரகத லிங்கங்களை வைத்து பூஜை செய்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது காலம் காலமாக மக்களிடம் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதனால் திருட்டுப்போன மரகத லிங்கங்களை மீட்பதற்கு தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்தப் படை விசாரணை நடத்தி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திருட்டுப்போன பிரபலமான மரகத லிங்கத்தை சமீபத்தில் மீட்டனர். அந்த லிங்கத்தின் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். ஒரு கிலோ எடை உள்ளது.
அதேபோல, திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் தியாகராய சுவாமி கோவிலில் 92ம் ஆண்டு திருட்டுப்போன இன்னொரு மரகத லிங்கத்தையும் கண்டுபிடிக்க தனிப்படை போலீசாரை முடுக்கிவிட்டோம். தனிப்படை போலீசாரும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் விழுப்புரத்தை சேர்ந்த தேவசேனாதிபதி, வேல்முருகன், கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் விசாரித்தோம்.
அதில் தேவசேனாதிபதியிடம் ஒரு சிறிய மரகத லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வைத்திருந்த 250 கிராம் எடையுள்ள இந்த மரகத லிங்கம் ரூ.5 கோடி மதிப்புடையது.
திருக்காரவாசல் கோவிலில் முதலில் படிகலிங்கம் இருந்துள்ளது. அது சேதம் அடைந்துவிட்டதால், அருணாச்சல செட்டியார் என்பவர் இந்த மரகத லிங்கத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு திருக்காரவாசல் கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளார்.
விரைவில் கோர்ட்டு அனுமதியோடு இந்த மரகத லிங்கம் திருக்காரவாசல் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த லிங்கத்தை யாரிடமிருந்து எப்படி வாங்கினார்கள் என்பது பற்றி கைதாகியுள்ள 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இதேபோல, நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயி தாட்சாயிணி அம்மன் கோவிலில் இருந்த கோமேதக லிங்கமும் திருட்டு போய் உள்ளது. அதை மீட்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விலை மதிப்புள்ள மக்களால் போற்றி வணங்கக்கூடிய 2 மரகத லிங்கங்களையும் மீட்ட ஐ.ஜி. ராஜேந்திரன் தலைமையிலான துணை சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் காதர்பாட்சா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசாரை நான் மனதார பாராட்டுகிறேன் என்றார் திலகவதி.