சுயேச்சை வேட்பாளர் வீட்டில் நகை பணம் கொள்ளை!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, குரூஸ்புரத்தைச் சேர்ந்த மெரிஞர் என்பவரின் மகன் டேனியல் (33). இவர் அப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருச்செந்தூர் இடைத் தேர்தலில் பலூன் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் டேனியலின் மனைவி, பள்ளியில் படிக்கும் தனது மகனிற்கு உணவு கொடுத்துவிட்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்பு அவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 2.5சவரன் தங்க நகை, மற்றும் ரொக்கப் பணம் ரூ.8800 கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.