தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது-கருணாநிதி

தெலுங்கானா தனி மாநில விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியின் கருத்தைக் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கருணாநிதி, தாமதமான முடிவு, அவசர கோல அறிவிப்பு. மத்திய அரசின் அறிவிப்பால் ஆந்திர மாநிலத்தில் இன்று பெரும் குழப்பமான நிலை உருவாகி விட்டது.
இந்த முடிவில் தாமதம் ஏற்பட்டிருக்கக் கூடாது. அதேசமயம், இப்போதைய அறிவிப்பும் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தப் பிரச்சினையைக் கையாண்ட விதத்தால் ஆந்திரா பெரும் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, அப்படிப்பட்ட கருத்துக்களுக்கு இங்கு இடமே இல்லை. திமுகவிலும் சரி, தமிழக மக்களிடமும் சரி அப்படிப்பட்ட எண்ணமே இல்லை என்றார் கருணாநிதி.
சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள்...
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவ அறிக்கை...
இடைத்தேர்தல் என்பதாலும், என் உடல் நிலை கருதியும் நான் திருச்செந்தூர், வந்தவாசிக்கு நேரடியாக வராவிட்டாலும், மடல் வாயிலாகவாவது நம் அண்ணன் நம்மிடம் ஒரு முறை வாக்கு கேட்டானா என்று நீ கேட்டுவிடக் கூடாதல்லவா?
அதற்காக மட்டுமல்ல; எதிர்தரப்பினர் இந்தத் தேர்தலில் என்ன சொல்லி வாக்குக் கேட்பது? அரசின் மீது என்ன குற்றஞ்சாட்டுவது? என்று தெரியாத நிலையில் குழப்பமடைந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, அருந்ததிய சமுதாயத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டினை நாம் செய்து கொடுத்து, அதற்காக வள்ளுவர் கோட்டமே கொள்ளாத அளவிற்கு எனக்கு நன்றியறிவிப்பு கூட்டம் நடத்திய மூன்றாம் நாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திருச்செந்தூரிலே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அருந்ததிய சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று பேசுகிறார் என்றால், அந்தத் தொகுதி மக்கள் அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தான் வருத்தப்படுகிறேன்.
நாம் வாக்காளப் பெருமக்களிடம் சென்று வாக்குகளைக் கேட்கிறபோது, நம் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்லி, எங்களை பதவியிலே அமர்த்தினீர்கள், நாங்கள் சும்மாயிருக்கவில்லை, இதோ இவையிவைகளைச் செய்திருக்கிறோம் என்று பட்டியலிட்டுக்காட்டி அதன் பெயரால் வாக்குகளைக் கேட்போம்.
கடந்த நான்காண்டு கால ஆட்சியில் கழக அரசு செய்த சாதனைகளை வாக்களிக்கப் போகும் மக்களுக்கு நினைவூட்டுவதற்காக ஒருமுறை பட்டியலிட விரும்புகிறேன்.
கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி, 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.2144 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரத்து 216 செலவில் 89 லட்சத்து 78 ஆயிரத்து 496 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், ரூ.360 கோடி செலவில் 20 லட்சத்து 680 கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
1 லட்சத்து 75 ஆயிரத்து 798 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் இலவச நிலம். 6 லட்சத்து 85 ஆயிரத்து 976 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்.
22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி. விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி ரத்து. 117 உழவர் சந்தைகள் மீண்டும் திறப்பு. குவிண்டால் ஒன்றுக்கு சாதாரண நெல் விலை ரூ.1000, சன்ன ரக நெல் விலை ரூ.1050 என உயர்த்தியது.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 1550 ரூபாய் வழங்கிட 24-9-2009 அன்று ஆணை; இது கடந்த ஆண்டைவிட டன் ஒன்றுக்கு 330 ரூபாய் கூடுதலாகும்.
ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ' நிறுவனத்தின் மூலம் 31-3-2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி. 2009-10 ஆண்டில் பயிர்க்காப்பீடு செய்திடும் 25 லட்சம் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கிட 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ரூ. 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 30 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 77 ஆயிரத்து 817 உறுப்பினர்கள் சேர்ப்பு.
11 லட்சத்து 96 ஆயிரத்து 705 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 544 கோடியே 8 லட்சத்து 28 ஆயிரத்து 87 ரூபாய் உதவித் தொகை.
2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்; வாழைப்பழங்கள். தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12ம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.
ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 2 லட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ். ஏழை மகளிர்க்கு பட்டப் படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.
திருமணம் ஆகாமல் 50 வயது கடந்து வறுமையில் வாடும் 9 ஆயிரத்து 158 ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித் தொகை. 1 கோடி குடும்பங்கள் பயன்பெற கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 517 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஏறத்தாழ 3 லட்சத்து 44 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர், ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்றோர்க்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 400 ரூபாய் என உயர்வு; 7 லட்சத்து 39 ஆயிரத்து 541 முதியோரும், 7 லட்சத்து 90 ஆயிரத்து 41 ஆதரவற்றோரும் பயன்.
2006-க்குப்பின் 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 72 ஆயிரத்து 346 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 3 ஆயிரத்து 276 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1,75,677 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 175 கோடியே 67 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்.
தமிழகத்தில் உள்ள சாலைகளில் 551 சிறு மற்றும் பெரிய பாலங்கள் 557 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் திட்டம், ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். மதுரவாயலில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலைத் திட்டம்.
'இவை சாதனைகளில் சில மட்டுமே. தமிழகத்திலே உள்ள ஒவ்வொருவரும் இந்தச் சாதனைகளில் ஏதாவது ஒன்றால் பயன்பெறுகிறார்கள். அந்தச் சாதனைகளின் பெயரால் - இத்தகைய சாதனைச் சரித்திரம் படைத்த ஆட்சியின் தலைவன் என்ற நிலையில்தான் அனைத்து மக்களிடமும்,
அருமைத் தாய்மார்களிடமும் அவர்களின் குடும்பத்து உடன்பிறப்புகளில் ஒருவனாக இருக்கின்ற நான் என்ற உரிமையோடும் - மேலும் அவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற சமுதாய முன்னேற்ற நோக்கத்தோடும் அன்பு உடன்பிறப்பே, உன் வாயிலாக நான் வாக்குகளைக் கேட்கின்றேன்' என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
--












Click it and Unblock the Notifications