ஆந்திரப் பிரிவினைக்கு தமிழகத்தின் சதியே காரணம்- லட்சுமி சிவபார்வதி
ஹைதராபாத்: ஆந்திராவைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.டி.ராமாராவ் சமாதி முன்பு சாகும் வரை நாளை முதல் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்த என்.டி.ஆரின் மனைவி லட்சுமி சிவபார்வதி இன்று திடீரென உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
நேற்று இப்போராட்டம் குறித்து அவர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தை பிரிக்கும் தவறான முடிவை எடுத்து விட்டனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முடிவு கண்டனத்துக்குரியது.
மாநிலப் பிரிவினையைத் தடுப்பதற்காக நான் என்.டி.ராமராவ் சமாதி முன் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், திடீரென இன்று அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் லட்சுமி சிவ பார்வதி பேசுகையில், தமிழகம்தான் இந்த பிரிவினைக்குப் பின்னணியில் உள்ளது.
சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா பிரிந்து சென்றதற்கு இப்போது பழிவாங்குகிறார்கள் தமிழகத்தினர் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசினார்.