பள்ளி வேன் மீண்டும் விபத்து - 20 குழந்தைகள் உயிர் தப்பினர் - டிரைவர் ஓட்டம்
ஆத்தூர்: ஆத்தூர் கிரைன்பஜாரில் செயல்பட்டு வரும் பாரதி வித்யாலயா நர்ஸரி, பிரைமரி பள்ளி வேன் விபத்தில் 20 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆத்தூர் கிரைன்பஜாரில் செயல்பட்டு வருகின்றது பாரதி வித்யாலயா நர்ஸரி, பிரைமரி பள்ளி. இந்த பள்ளிக்கு சொந்தமான மகேந்திரா வேன், நேற்று மாலை 6.30 மணிக்கு மாணவர்களை வீட்டில் விடுவதற்காக புறப்பட்டு சென்றுள்ளது.
அப்போது வேனில், ஆத்தூர் தெற்கு காடு, அம்மம்பாளையம், காந்திபுரம், துலுக்கனூர் பகுதி மாணவர்கள், இருந்தனர்.
இரவு 7 மணியளவில் தெற்குகாடு மாணவர்களை இறக்கி விட்ட டிரைவர், ஆத்தூர் - திருச்சி சாலையின் குறுக்கே கோரையாற்றின் கரையில் வேனை செலுத்திய போது வேன் கட்டுப்பாடு இழந்து ஆற்றங்கரையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி விட்டது.
சாய்ந்தபடி பள்ளத்தில் நின்ற வேன், 15 அடி ஆழம் கொண்ட ஆற்றில் கவிழும் நிலையில் இருந்தது. ஆனால், வேனில் இருந்த டிரைவர், கிளினர் ஆகியோர், குதித்து தப்பியோடி விட்டனர்.
வேனில் இருந்த மாணவர்களின் கூச்சல் சத்தம் கேட்ட அப் பகுதி மக்கள் விரைந்து சென்று மாணவர்களை காப்பாற்றி அனுப்பி வைத்தனர்.