தேர்தல் ஆணையம் உத்தரவு - தென் மண்டல ஐஜி அதிரடி மாற்றம்
சென்னை: திருச்செந்தூர் தொகுதி உள்ளடங்கிய தென் மண்டல காவல்துறை ஐஜி கிருஷ்ணமூர்த்தியை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தொகுதியை தன் அதிகார கட்டுப்பாட்டின்கீழ் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கொண்டிருக்கிறார்.
அவரை, அங்கு இருந்து இடமாற்றம் செய்யும் தனது முடிவை, தேர்தல் கமிஷன் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.
தென்மண்டலத்துக்கு அருகில் உள்ள மண்டல ஐ.ஜி.யிடம் பொறுப்புகளை ஒப்படைக்க எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியிலும், திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோதும் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது பொறுப்புகள் மத்திய மண்டல் ஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.