தமிழகம்- ஆந்திரா போக்குவரத்து 3வது நாளாக துண்டிப்பு -- பயணிகள் தவிப்பு
வேலூர்: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திராவில் தொடர்ந்து கலவரம் நீடிப்பதால், தமிழகத்தில் இருந்து திருப்பதி உள்ளிட்ட ஆந்திர நகரங்களுக்கு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து 3வது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானா பிரச்னையால் ஆந்திர பகுதிகளில் ஆர்ப்பாட்டம், கல்வீச்சு என கலவரங்கள் நடப்பதால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பல்வேறு பஸ்களின் போக்குவரத்து ஆந்திராவுக்கு நிறுத்தப்பட்டது.
கடலூர், கும்பகோணம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருப்பதி, சித்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் வேலூருடன் நிறுத்தப்பட்டன.
இதனால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் உட்பட பல பயணிகள் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் பல பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச்சென்றனர். சிலர் செய்வதறியாது விழி பிதுங்கி நின்றனர்.
பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி பெல்லாரி, சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் கொண்டு வரப்படும் வெங்காயம், தக்காளி போன்ற சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத் துறை சார்பில், திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் இரண்டு பஸ்களும் சென்னையிலிருந்து கிளம்பின. திருத்தணியை அடைந்தபோது, கலவரம் தீவிரமடைந்திருப்பதால் ஆந்திராவிற்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். எனவே, அந்த பஸ்கள் திரும்பி விட்டன.
ஆந்திராவில் நிலைமை சீரடைந்த பின்னரே, பஸ்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத்துறை மேலாண் இயக்குனர் மோகன்தாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications