எஸ்.எம்.கிருஷ்ணாவின் அறியாமை-ஜெ. தாக்கு
சென்னை: கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது என்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் இரக்கமற்ற அறிவிப்பு, துரதிருஷ்டவசமானது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கையை எடுக்காத கருணாநிதியின் செயல் மிகவும் வருத்தத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கச்சத்தீவு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. இந்திய அரசை பொறுத்தவரையில் கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று அவர் கூறியிருக்கிறார்.
கச்சத் தீவு குறித்த விவரங்கள் உண்மையிலேயே கிருஷ்ணாவுக்கு தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், அறியாமையின் அடிப்படையில்தான் 1974ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
இன்றும் கூட அதே அறியாமைதான் மத்திய அரசில் நிலவுவது போல் தோன்றுகிறது. மத்திய அரசின் இது போன்ற செயல், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக தமிழக மீனவ மக்களுக்கு மிகவும் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான், இலங்கை, அப்போதைய சிலோன், கச்சத் தீவு இலங்கை எல்லைக்குட்பட்டது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தது. துரதிர்ஷ்டவசமாக, கடும் அறியாமையின் விளைபொருளான அக்கறையின்மைதான் இந்தியாவின் கொள்கையாக இருந்து வருகிறது.
கச்சத் தீவு ஜமீன்தாரின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதி என்று அந்த காலத்து அசல் ஜமீன்தாரர்களில் ஒருவர் உரிமை கோரினார். அந்த ஜமீன்தாரர் தற்போது இல்லை. எனவே, கச்சத் தீவின் நிலைப்பாடு எனக்குத் தெரியாது என்று 1960ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாநிலங்களைவையில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்தார்.
அதே ஆண்டில், மற்றொரு சமயத்தில், பாம்பனுக்கு கிழக்கே 18 மைல் தொலைவில் கச்சத் தீவு உள்ளது; பாம்பன் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது! என்று மாநிலங்களவையில் நேரு தெரிவித்திருக்கிறார்.
பின்னர், முக்கியத்துவம் இல்லாத வெறும் கற் பாறைதான் கச்சத் தீவு என்று இந்திரா காந்தி வேறு குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக மீனவர்கள் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்க விரும்பினால், இயல்பாகவே, இலங்கையுடன் நாம் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சொல்வதிலிருந்து, தமிழக மீனவர்கள் குறித்த தனது அறியாமையையும், அவர்களின் மீதுள்ள தனது அவமதிப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
மீனவர்கள்... மீன் பிடிக்க விரும்பினால் என்று கிருஷ்ணா கூறுவதற்கு என்ன பொருள்? கடலுக்குள் மீனவர்கள் செல்வது மீன் பிடிப்பதற்காகத்தான். கோலி விளையாட அல்ல.
இந்த சந்தேகத்தை கிருஷ்ணா தெளிவாக்கிக் கொண்டு, எந்த விதமான உடன்படிக்கையை, எப்பொழுது இலங்கையுடன் ஏற்படுத்தப்போகிறார்?. கிருஷ்ணா உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு முன், இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள் உயிரிழக்க வேண்டும்?. கச்சத் தீவின் மீது தமிழக மீனவர்களுக்குள்ள முக்கியத்துவம் குறித்து கிருஷ்ணாவுக்கு திமுக ஏன் எதையும் கற்பிக்கவில்லை?. தேர்தல் சமயத்தில்தான் மீனவர்கள் முக்கியமாக கருதப்படுவார்களோ?.
அதற்குப் பிறகு அவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிகளுக்கு இரையானால் கவலையில்லை போலும்!.
கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது தவறு மட்டும் அல்ல, சட்டப்படியான பிழை என்றும் அதிமுக கருதுகிறது. தமிழக மீனவர்களை கருத்தில் கொள்ளாமல் கச்சத் தீவு காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறாமல் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.
எனவேதான், 1974ம் ஆண்டு தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றால், கச்சத் தீவை திரும்பப் பெறுவதுதான் ஒரே வழி.
வாழ்வாதாரமே மறுக்கப்பட்டு ஆபத்தான சூழ்நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென்றால், குறைந்தபட்சம் கச்சத் தீவை இலங்கை அரசிடம் இருந்து மீட்டாக வேண்டும்.
கச்சத் தீவு பிரச்சனை உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணையில் இருக்கும் போது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்ற எஸ்.எம். கிருஷ்ணாவின் இரக்கமற்ற அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது.
இதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கத் தவறிய கருணாநிதியின் செயல் மிகவும் வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications