கைதான 5 அமெரிக்கர்கள்-நாடு கடத்த பாக். கோர்ட் தடை
லாகூர்: தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஐந்து இளம் அமெரிக்கர்களை நாடு கடத்த பாகிஸ்தான் கோர்ட் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா என்ற நகரில் வைத்து இந்த ஐந்து இளம் அமெரிக்க முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் ஆப்கானிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு முன்னர் வசிரிஸ்தான் சென்று அங்குள்ள தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் இவர்களை போலீஸார் கைது செய்தனர். இதுவரை இவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் எந்தக் கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்படவில்லை.
மேலும் இவர்களை நாடு கடத்தும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில், லாகூர் உயர்நீதிமன்றம் இவர்களை நாடு கடத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்துள்ளதாம்.
இதுகுறித்து லாகூர் உயர்நீதிமன்ற பதிவாளர் தாஹிர் பர்வேஸ் கூறுகையில், இவர்கள் குறித்த விவரங்களை அறிய நீதிமன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது. இவர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே அதுவரை இவர்களை நாடு கடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பின்னர் இந்த உத்தரவை லாகூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications