அரிசி ஆலை சுவர் இடிந்து 4 பெண்கள் பலி -ஐவர் மீட்பு
திருச்சி: திருச்சி அருகே அரிசி ஆலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். ஐந்து பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் கோவிந்தன். அரிசி வியாபாரி. இவர் மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியில் அரிசி ஆலை ஒன்றை புதிதாக கட்டி வந்தார்.
நேற்று சுமார் 33 அடி உயரத்தில் சாரங்கள் கட்டப்பட்டு சுவர்கள் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
மேற்கு பகுதி சுவர் கட்டும் பணியில் 2 கொத்தனார்களும், 7 சித்தாள்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை 4.30 மணி அளவில் 33 அடி உயரத்தில் கட்டப்பட்டு இருந்த மேற்கு பகுதி சுவர் பெரும் சப்தத்துடன் இடிந்து விழுந்தது.
அப்போது சாரங்களில் நின்று வேலை பார்த்த கொத்தனார்களும், சித்தாள்களும் சுவருடன் கீழே விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் திரண்டனர். தீயணைப்பு் படையினருக்கும் தகவல் போனது. மக்களே சேர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 5 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் அனைவரும் படுகாயத்துடன் இருந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் 4 பேர் சிக்கி இருப்பதாக அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் கூறினார்கள்.
உடனடியாக அவர்களை மீட்க 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது விஜயா (45),புஷ்பவல்லி (37), ராஜலட்சுமி (40), மேகலா (36) ஆகிய நான்கு பெண்களும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
இந்த அரிசி ஆலையின் பில்லர்களை செங்கற்களால் கட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையில் இந்த பில்லர்கள் உறுதித்தன்மை குலைந்து சுவர் இடியக் காரணமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications