புயல் வலுவிழந்தது-தமிழகத்தில் மழை நீடிக்கும்
மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்:
இலங்கையின் திரிகோணமலையைக் கடந்து வடக்கு இலங்கை மீது நிலை கொண்டுள்ள வார்டு புயல் தற்போது பலவீனமடைந்து விட்டது. தற்போது அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி வடக்கு இலங்கைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் இடையே நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவில் பிரவேசிக்கலாம். இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடையும் வாய்ப்பும் உள்ளது.
இதன் காரணமாக கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக கன மழை மற்றும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக் கூடும்.
உட்புறத் தமிழத்தில் பல இடங்களில் கன மழை மற்றும்
பலத்த மழை பெய்யக் கூடும்.
தெற்கு தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். வட கடலோரத்தில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தி்ல் காற்று வீசக் கூடும்.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பள்ளிகளுக்கு விடுமுறை...
புயல் காரணமாக சென்னை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
முதலில் புயல் நாகையைத்தான் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அங்கு கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
கடைசியில் புயல் திசை மாறியதால் நாகை தப்பியது. இருப்பினும் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடலோரத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பல இடங்களில் சூறைக் காற்றுடன் மழை பெய்கிறது.
சென்னையில் காலை முதல் லேசான மழை காணப்படுகிறது.
ரயில்கள் நிறுத்தம்...
இந்த நிலையில் இன்று காலை முதல் ராமேஸ்வரம் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த காற்று வீசி வருகிறது. குறிப்பாக பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்பும், சூறாவளிக் காற்றும் பலமாக வீசி வருகிறது.
இதையடுத்து அங்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - மதுரை ரயில் பாம்பன் பாலத்தில் வந்தபோது பலத்த சூறைக் காற்று வீசியதால், ரயில் நிறுத்தப்பட்டு பின்னோக்கிச் சென்று மீண்டும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கே திரும்பியது.
அதேபோல, சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்த ரயில் மண்டபம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தம்ழகத்தில் மழை அளவு:
புயல் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
அதிக அளவாக சீர்காழியில் 14, ராமேஸ்வரம், தரங்கம்பாடி, காரைக்காலில் தலா 11 செமீ மழை பெய்துள்ளது.
கொல்லிடம், வேதாரண்யம் தலா 10, மயிலாடுதுறை, சிதம்பரம் தலா 9, குடவாசல், திருத்துறைப்பூண்டி, வலங்கைமானில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.
காட்டுமன்னார் கோவில், திருவிடைமருதூர் தலா 6, பரங்கிப்பேட்டை, பாபநாசம், வல்லம், நன்னிலம், தொண்டி தலா 5, அதிராம்பட்டனம், கும்பகோணம், தஞ்சாவூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், பாம்பன் தலா 4, புதுச்சேரி, திருவையாறு, திருவாரூர், மணல்மேல்குடி, ஜெயங்கொண்டம் தலா 3, கடலூர், சேத்தியாதோப்பு, வானூர், மதுக்கூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கரம்பக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தோகைமலை தலா 2, சென்னை விமான நிலையம், செங்குன்றம், திருக்கோவிலூர், விழுப்புரம், பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி, மன்னார்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், பெருங்காலூர், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவகோட்டை, அரியலூர், புல்லம்பாடி தலா 1 செமீ மழை பெய்துள்ளது.