'மக்கள் மீது அக்கறை இல்லாத ஜெ'-நெப்போலியன்
வந்தவாசி: 234 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் ஜெயித்துவிட்டு, அடுத்த முதல்வர் நான் தான் என்று பேசி வரும் விஜயகாந்த், அவர் நடத்தும் கல்லூரிக்கு கூட முதல்வர் ஆக முடியாது. முதல்வர் பதவி என்ன சாதாரண பதவியா? என்று மத்திய இணையமைச்சர் நெப்போலியன் கூறினார்.
வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து பல்வேறு கிராமங்களில் அவர் பிரசாரம் செய்து பேசியதாவது:
கடந்த மூன்றரை ஆண்டுகளாக கலைஞர் ஆட்சி சீறும் சிறப்புமாக நடக்கிறது. அத்தகைய சிறப்பான ஆட்சி இன்னும் ஒன்றரை வருடத்திற்கு இருக்க, ஆட்சியில் இருக்கும் கட்சியின் வேட்பாளர் சட்டமன்றத்திற்கு போனால், இப்பகுதி குறைகளை எடுத்து கூறி அடிப்படை வசதிகள், அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்ற முடியும்.
2 மாதம் முன்பு 5 தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. தோல்வி பயம் காரணமாக ஓட்டு எந்திரம் சரியில்லை என கூறி ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், தற்போது கட்சியை காப்பாற்ற இடைத்தேர்லில் போட்டியிடுகிறாரே தவிர அவருக்கு எந்தக் காலத்திலும் மக்கள் மீது அக்கறை இருந்தது இல்லை.
மக்கள் மீது அக்கறையில்லாத ஜெயலலிதாவை புறம்தள்ளி விடுங்கள்.
அடுத்தாக 234 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் ஜெயித்துவிட்டு, அடுத்த முதல்வர் நான் தான் என்று பேசி வரும் விஜயகாந்த், அவர் நடத்தும் கல்லூரிக்கு கூட முதல்வர் ஆக முடியாது. முதல்வர் பதவி என்ன சாதாரண பதவியா?.
தமிழகத்தில் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை சிறப்பாக செயல்படுத்தி பெருமை சேர்க்கும் முதல்வர் கருணாநிதியை பெற்றுள்ளீர்கள் என்று மற்ற மாநில அமைச்சர்களே பொறாமையுடன் கூறுகின்றனர். டெல்லியில் இதை அவர்கள் சொல்லக் கேட்கும்போது தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்ற முறையில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றார் நெப்போலியன்.
பல இடங்களில் முதல்வரின் கருணாநிதியின் இயல்புகளையும், சாதனைகளையும் விளக்கும் வகையில் 'கிழக்கு செவக்கயிலே' என்ற சினிமா பாடல் மெட்டில் பாட்டுப்பாடியும் பிரசாரம் செய்தார் நெப்போலியன்.
வந்தவாசி கைவிடாது: பொன்முடி..
இந் நிலையில் விழுப்புரத்தில் நடந்த திமுக தொண்டரின் திருமண விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
பகுத்தறிவு வளர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற சீர்திருத்த திருமணங்கள் நடத்தப்படுகின்றன. எங்கள் குடும்பத்தில் எனது தம்பிகள் மற்றும் குழந்தைகள் என அனைவரது திருமணமும் சீர்திருத்த திருமணங்கள் தான்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் அனைவரும் வந்தவாசியில் தேர்தல் பணியில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டு இங்கு திருமணத்திற்கு வந்துள்ளனர்.
அவர்கள் என்னை ஏமாற்றினாலும் வந்தவாசி திமுகவை கைவிடாது. இடைத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.
இந்தத் திருமணத்திற்கு வந்ததுபோல் அனைவரும், கூடவே தலா 10 பேரை அழைத்துக் கொண்டு உடனே வந்தவாசிக்கு புறப்படுங்கள் என்றார் பொன்முடி.