கொலை மிரட்டல் வழக்கு: என்.கே.கே.பி.ராஜா கைது
ஈரோடு: தி.மு.க முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பவானிசாகர் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், தமிழக கைத்தறித்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்.கே.கே.பி.ராஜா. இவர் பெருந்துறையை சேர்ந்த மலர்விழி, பழனிச்சாமி ஆகியோரின் நிலத்தை முறைகேடாக அபகரித்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக புகார் தெரிவித்த பழனிச்சாமியின் மகன் சிவபாலனை கடத்தியதாகவும் என்.கே.கே.பி.ராஜா மீது புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் திமுகவை விட்டு நீக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி சிவபாலனையும், அவருடைய நண்பர் செல்வகுமாரையும் காஞ்சிக்கோவிலில் உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று என்.கே.கே.பி.ராஜா, அவருடைய மனைவி உமா மகேஸ்வரி, உதவியாளர் காஞ்சிகுமார் உள்பட 10 பேர் அடித்து உதைத்து காயப்படுத்தியதாக காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் சிவபாலன் புகார் செய்தார்.
அதேசமயம், சிவபாலன் மற்றும் பலர் அரிவாளுடன் வந்து தன்னையும், தனது மனைவி மற்றும் 4 பேரை வெட்டியதாக என்.கே.கே.பி.ராஜாவும் போலீசில் புகார் செய்தார். இந்த 2 புகார்களையும் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
ஏற்கனவே நிலத்தகராறு மற்றும் ஆள் கடத்தல் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து பெருந்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் இந்த வழக்கையும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தும்படி போலீஸ் டி.ஜி.பி. ஜெயின் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு சாம்பசிவம், ஈரோடு மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு காஞ்சிகுமார் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
என்.கே.கே.பி. ராஜா, உமாமகேஸ்வரி ஆகியோர் ஈரோடு கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றனர். இவர்கள் 2 பேரும் கோர்ட்டு உத்தரவுப்படி ராமநாதபுரம் கோர்ட்டில் தினசரி கையெழுத்து போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பவானி சாகர் எம்எல்ஏ சுப்பிரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜா மீது மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து கவுந்தாபாடி வீட்டில் இருந்த அவரை நம்பியூர் போலீசார் கைது செய்தனர்.
முதல் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ராஜா மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications