அரசியலிலிருந்து ஓய்வு: டிச-21ல் அறிவிக்கும் அத்வானி
டெல்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவடையும் டிசம்பர் 21ம் தேதி அல்லது அதற்கு அடுத்த சில நாட்களில் தனது ஓய்வு திட்டத்தை அறிவிக்கவுள்ளார் எல்.கே.அத்வானி.
மேலும், பாஜகவின் புதிய தலைவராக நிதின் கத்காரியை நியமிப்பது தொடர்பான முடிவையும் இம்மாத இறுதிக்குள் பாஜக தலைமை அறிவிக்கவுள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜகவில் ஏற்பட்ட பெரும் குழப்பம், நெருக்கடி, மோதல்கள், வாக்குவாதங்கள், சரமாரி புகார்களைத் தொடர்ந்து அரசியலிலிருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்தார் அத்வானி. இருப்பினும் அவரது ஓய்வு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது நடந்து வரும் குளிர்காலக் கூட்டத் தொடருக்குப் பின்னர் அத்வானி ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 21ம் தேதியுடன் கூட்டத் தொடர் முடிகிறது. அன்றைய தினம் அல்லது அடுத்த சில நாட்களில் அத்வானி தனது ஓய்வுத் திட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் டிசம்பர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவராக மகாராஷ்டிர பாஜக தலைவர் கத்காரி நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இந்த நியமனமும், இந்த மாத இறுதிக்குள்ளாகவே முடிந்து விடும்.
ராஜ்நாத் சிங் ஓய்வு பெற்ற சில நாட்களில் கத்காரியின் பெயர் அறிவிக்கப்பட்டு முறைப்படி தேர்தல் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக வட்டாரம் தெரிவிக்கிறது.
பாஜக சட்ட திட்டங்களின் படி, கட்சித் தலைவர் தேர்தலை, பாதிக்கும் மேற்பட்ட மாநில நிர்வாக தேர்தல் முடிவடைந்த பின்னர்தான் நடத்த முடியும். டிசம்பர் 15ம் தேதியே பாஜக தலைவர் தேர்தல் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் சில மாநிலங்களில் நிர்வாக தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் முடியவில்லை. இதனால் கத்காரியின் பெயர் தலைமைப் பதவிக்கு அறிவிக்கப்பட்டாலும் கூட முறைப்டியான தேர்தல் ஜனவரி மாத மத்தியில்தான் முடியும் என்று தெரிகிறது.
அத்வானி ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. அவர் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியதும், சுஷ்மா சுவராஜ் அந்தப் பதவியில் அமர்த்தப்படுவார்.
ஜஸ்வந்த் சிங் ராஜினாமா:
இந் நிலையில் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தலைவர் பதவியில் இருந்து ஜஸ்வந்த் சிங் ராஜினாமா செய்துள்ளார். கடந்த திங்கள்கிழமை அன்று ஜஸ்வந்த் சிங்கின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், தங்கள் கட்சி மூலம் கிடைத்த இந்தப் பதவியை விட்டு விலக வேண்டும் என்று அந்தக் கட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை ஜஸ்வந்த் ஏற்க மறுத்து வந்தார்.
இந் நிலையில் இப்போது திடீரென ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications