போயிங் 787 ட்ரீம்லைனர் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

வாஷிங்டன், எவரெட் அருகே உள்ள போயிங் நிறுவனத்தின் சோதனை மையத்தில் இருந்து இந்த விமானம் நேற்று காலை முதல் முறையாக வான் சோதனைக்குக் கிளம்பியது. மூன்று மணி நேர சோதனை பயணத்துக்குப் பிறகு சியாட்டிலில் உள்ள தளத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து உலகின் அதிநவீன 'போயிங் 787' ட்ரீம்லைனர் பயணிகள் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக போயிங் நிறுவனத் தலைவர் ஜிம் மெக்நெர்னி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
போயிங் நிறுவனத்தின் போட்டியாளரான ஏர் பஸ், இதே போன்ற அதிநவீன அம்சங்கள் கொண்ட A350 மாடல் விமானத்தை தயாரித்து முடித்துவிட்டது.
ஆனால் போயிங் தனது தயாரிப்பை கடந்த 2008ம் ஆண்டிலேயே வெளிக் கொண்டு வர திட்டமிட்டது. ஆனால், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் பலமுறை தாமதமானது. தற்போது ஏர்பஸ் நிறுவனத்துக்கு முன்னதாகவே போயிங் தனது 787 ட்ரீம்லைனரை சோதித்து பார்த்துள்ளது.
போயிங் 787 பயணிகள் விமானத்தை வாங்க 57 விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவரை மொத்தம் 840 ஆர்டர்கள் குவிந்து விட்டன. இதில் ஜப்பானைச் சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேசுக்கு முதல் சப்ளையை அடுத்த ஆண்டு இறுதியில் போயிங் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கனமான எரிசக்தி, குறைவான எடை, அகண்ட உட்பகுதி, சொகுசான பயணம் போன்ற அம்சங்களுக்காக போயிங் 787 பயணிகள் விமானத்துக்கு விமான நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
விமானங்களின் பிரதான வயிற்றுப்பகுதி மற்றும் இறக்கைகள் ஆகியவற்றின் எடைகளை குறைப்பதற்காக அலுமினியம் உலோகங்களுக்கு பதிலாக பிரத்தியேக கலப்பு மூலப் பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போதுள்ள விமானங்களை ஒப்பிடுகையில் போயிங் 787 விமானம் 20 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்தும் என கூறப்படுகிறது.
186 அடி நீளமும், 56 அடி உயரமும் கொண்ட இந்த இரட்டை என்ஜின் விமானத்தில் 290 முதல் 330 பயணிகள் வரை அமரலாம். காலி விமானத்தின் மொத்த எடை ஒரு லட்சத்து ஆயிரம் கிலோ. வேகம், மணிக்கு 945 கி.மீ.
விலை சுமார் 155 மில்லியன் அமெரிக்க டாலர்.












Click it and Unblock the Notifications