பங்கு சந்தை-இனி 10 நிமிடம் முன்பே துவங்கும்!
மும்பை: வரும் டிசம்பர் 18ம் தேதி முதல் வழக்கத்தை விட 10 நிமிடங்கள் முன்னதாகத் துவங்கவிருக்கிறது மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்இ.
வழக்கமாக காலை 9.55க்கு சந்தையின் துவக்க மணி ஒலிக்கும். மாலை 3.30க்கு முடியும்.
இனி காலை 9.44-க்கே துவக்க மணி ஒலிக்கும். மாலை 3.30க்கு சந்தையின் அனைத்து பங்குப் பரிமாற்றங்களும் நிறைவு பெறும் என செபி அறிவித்துள்ளது.
அந்நிய முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முதல் நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாகவே பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. சில முதலீட்டாளர்கள் மற்றும் பரிவர்த்தனை மையத்தினர் 16 ம ணிநேர பரிவர்த்தனைக்கும் சிபாரிசு செய்து வந்தனர். ஆனால் செபி தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.
இந் நிலையில் தேசிய பங்கு பரிவர்த்தனை மையம் என்எஸ்இ, வர்த்தக நேரத்தை இனி 9 மணி முதல் 5 மணி வரை என மாற்ற வேண்டும் என கோரியது. இதைத் தொடர்ந்து இப்போது நேர மாறுதலை அறிவித்துள்ளது செபி.
இந்த அறிவிப்புப்படி பத்து நிமிடம் வர்த்தகம் முன்கூட்டி தொடங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் நேர நீட்டிப்பு குறித்து ஆலோசிப்பதாகவும், பொருத்தமான நேரத்தில் அதுபற்றி அறிவிக்கப்படும் என்றும் செபி அறிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள் ரியாக்ஷன்!:
ஆனால் இந்த மாறுதல்கள் குறித்து முதலீட்டாளர்களிடம் பெரிய ரியாக்ஷன் இல்லை.
"பத்து நிமிடம் முன்கூட்டி துவங்குவதில் என்ன பெரிய மாறுதல் வந்துவிடும் என்று தெரியவில்லை. இதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்றும் புரியவில்லை. குறைந்தது ஒரு மணிநேர வித்தியாசமாவது காட்டினால்தான், சந்தையைத் தீர்மானிக்கும் சக்தியாக அதைப் பார்க்க முடியும். இது சும்மா" என்கிறார் சென்ட்ரம் புரோக்கிங் நிர்வாக இயக்குநர் தேவேஷ் குமார்.
ஆனால் வேறு சில பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள், இந்த நேர நீட்டிப்பை கடுமையாக எதிர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நேரமாற்றம் குறித்து எடுக்கப்பட்ட சர்வேயில் பெரும்பாலான பங்குச் சந்தை நிபுணர்கள் மற்றும் தரகர்கள் நேர நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் நீண்ட நேர வர்த்தகம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
எனவே அனைவரது கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டு மீண்டு நேரமாற்றம் கொண்டு வரப்படும் என என்எஸ்இ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.