கோபன்ஹேகன் மாநாடு கிளப்பும் 46,200 டன் கார்பன் டை ஆக்சைடு!

இது 6,60,000 எத்தியோப்பியர்கள் ஒரு ஆண்டில் ஏற்படுத்தும் புகை மாசுக்கு சமமாம்.
உலகம் முழுவதுமிருந்து பத்திரிக்கையாளர்கள், பிரதிநிதிகள், பேச்சாளர்கள், பல்வேறு அமைப்பினர், பார்வையாளர்கள் என கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கோபன்ஹேகனில் குழுமியுள்ளனர். டிசம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
இவர்களின் வருகையால் ஏகப்பட்ட விமானங்கள் கோபன்ஹேகன் நகருக்கு வந்தவண்ணம் உள்ளன. இந்த விமானங்கள் எழுப்பும் புகைதான் மேற்கண்ட புள்ளி விவரம்.
இந்தப் புகையைக் கொண்டு 10 ஆயிரம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்ப முடியும். ஆண்டுக்கு 2300 அமெரிக்கர்கள் வெளிப்படுத்தும் புகை மாசுவுக்கு இது சமம் என்கிறார்கள் நிபுணர்கள்.
மாநாட்டின் மூலம் கிட்டத்தட்ட 5,700 டன் புகை மாசு வெளிப்படுமாம். இதுதவிர விமானங்களின் போக்குவரத்தின் மூலம் 40,500 டன் புகை மாசு வெளியாகிறதாம்.
இந்த ஆய்வை மேற்கொண்ட டிலோலைட் என்ற நிறுவனத்தின் ஆலோசகரான ஸ்டைன் பல்ஸ்லேவ் கூறுகையில், கியோட்டா மாநாட்டில் இந்த அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வெளியாகவில்லை. ஆனால் இந்த முறை மிகப் பெரிய அளவில் மக்கள் கூடியுள்ளதால் புகை மாசின் அளவு அதிகமாக உள்ளது.
ஒரு நாளைக்கு குறைந்தது 18,000 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். எனவே கார்பன் மாசின் அளவும் அதிகமாக உள்ளது.
இது தொடக்க கட்ட புள்ளி விவரம்தான். மாநாட்டின் நிறைவில் இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
நாங்கள் மேற்கொண்ட புகை மாசு ஆய்வின்போது, தங்குமிடங்களிலிருந்து வெளியாகும் புகை மாசு, உள்ளூர் போக்குவரத்தால் ஏற்படும் மாசு, மின்சாரம், மாநாட்டு அரங்கத்தை வெம்மையாக வைத்திருக்க செய்யப்படும் சூடுபடுத்தும் ஏற்பாடு, காகிதங்கள், பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கம்ப்யூட்டர்கள், சமையலறைகள், போட்டோ காப்பியர்கள், பிரின்டர்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் மாசு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டோம்.
கோபன்ஹேகனில் தற்போது வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களில் 23 சதவீதம் தங்குமிடத்திலிருந்துதான் வருகிறது. போக்குவரத்தின் பங்கு 7 சதவீதமாகும். 70 சதவீதம் மாநாட்டு அரங்குக்குள்ளிருந்து வருகிறது என்றார் பல்ஸ்லேவ்.
புகையைத் தடுக்கக் கூடியுள்ள மாநாட்டின் மூலம் இவ்வளவு புகையா...??












Click it and Unblock the Notifications