விலைவாசி: நாடாளுமன்றத்தில் அமளி-இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கூறி எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இடதுசாரிகளும் சமாஜ்வாடிக் கட்சியினரும் இன்று நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு விவகாரத்தைக் கிளப்பினர்.
கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விலைவாசி உயர்வு குறித்து உடனே விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். இதை அரசு ஏற்காததால் அமளியில் ஈடுபட்டர். இதையடுத்து மக்களவையை பகல் 11.30 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்தி வைத்தார்.
ஆனால், மீண்டும் அவை கூடியதும் அமளி தொடர்ந்தாதல் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
அதே போல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அந்த அவையும் ஒத்திவைக்கப்பட்டது.
ரயில் கட்டணம் உயராது-மம்தா:
முன்னதாக மக்களவையில் ரயில்வே துறைக்கான துணை மானியக் கோரிக்கை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில் ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களுக்காக ரூ.731 கோடியை அனுமதிக்க கோரும் இந்த மசோதாவை தாக்கல் செய்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில்,
விலைவாசி மற்றும் செலவீனங்கள் அதிகரித்த போதிலும் ரயில் கட்டணங்களோ சரக்குக் கட்டணங்களோ உயர்த்தப்படாது என்று அறிவித்தார்.