வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கும் கட்சிகள்!
நெல்லை & வந்தவாசி: தேர்தல் ஆணையம் என்னதான் கழுகுக் கண் கொண்டு பார்த்தாலும் கூட, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டுதான் உள்ளன- தங்கு தடையின்றி.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு 19ம் தேதி இடைத் தேர்தல். நாள் நெருங்கி விட்டதால் வாக்காளர்களுக்கு இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் செயல்களில் வேகம் கூடிக் காணப்படுகிறது இரு தொகுதிகளிலும்.
பலவிதமான அன்பளிப்புகள், பிரியாணிப் பொட்டலங்கள், வேட்டி, சேலை, மது பாட்டில்கள் என சகல விதமான பொருட்களையும் வாக்காளர்கள் கையில் திணித்து குளிப்பாட்டி வருகின்றன முக்கிய கட்சிகள்.
இதை விட முக்கியமாக பணத்தையும் தாராளமாக வாரி இறைத்து வருகின்றனராம்.
தேர்தலை சந்திக்கும் வந்தவாசி தொகுதிக்குட்பட்ட தெள்ளார் என்ற கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் கூறுகையில், ஒரு கட்சி எனக்கு 500 ரூபாய் தந்தது. இன்னொரு கட்சி 200 ரூபாய் தந்துள்ளது. இது முதல் கட்ட பணம் தான் என்கிறார்கள். வாக்குப்பதிவுக்கு முன்பாக 2வது கட்டமாகவும் பணம் கொடுப்பார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்.
ஒரு வீட்டில் ஐந்து ஓட்டு இருந்தால் அந்தக் குடும்பத்திற்கு ரூ. 6000 முதல் 8000 வரை பணம் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு பொருட்களையும் அன்பளிப்பாக தருகின்றனர்.
இதுதவிர மது பானங்கள் ஆறாக ஓடுகின்றன. ஒரு கட்சி குவார்ட்டர் விஸ்கி கொடுத்து ஓட்டுக் கேட்டு விட்டுச் சென்றுள்ளது. அத்தோடு பிரியாணி பொட்டலங்களையும் கூடுதலாக கொடுத்தனர்.
பெண்களுக்கு மது பாட்டில்களைத் தர முடியாதே!!. இதற்காக அவர்களை மினி லாரிகளில் கூட்டிச் சென்று ரகசிய இடத்தில் வைத்து இலவச சேலைகளையும், கூடுதலாக வேட்டிகளையும் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர் என்றார்.
இலவசங்களை அள்ளிக் கொடுப்பதில் முக்கியமான ஒரு கட்சிதான் படு உற்சாகமாகவும், எந்தப் பயமும் இன்றியும், படு தாராளமாக டிஸ்டிரிபியூட் செய்து வருகிறதாம். அதற்கு போட்டியாளரான இன்னொரு முக்கியக் கட்சி அந்த அளவுக்கு இறக்கி விடவில்லை என்றும் வாக்காளர்கள் சிலர் குறைபட்டுக் கொள்கின்றனர்.
நரேஷ் குப்தாவின் பொன்மொழி:
''எங்கெல்லாம் முறைகேடுகள் நடப்பதாக எங்களுக்குப் புகார்கள் வருகிறதோ, அந்தத் தொகுதியின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக பறக்கும் படைகளை அனுப்பி முறையான நடவடிக்கை எடுப்பார்கள்''!.












Click it and Unblock the Notifications