மாநில பிரிப்பு-ராமதாசுக்கு இந்து முன்னணி கண்டனம்
சென்னை: தமிழகத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற யோசனைக்கு இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு நாட்டில் விரும்பத்தகாத பல செயல்கள் நடைபெற வழி வகுத்துள்ளது.
ஆந்திரம் மட்டுமல்ல உத்தரப் பிரதேசம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கூட பிரிவினை கோரிக்கை எழுப்பப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
அதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது கோரிக்கையை தமிழக முதல்வர் நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற பிரிவினை கோரிக்கைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆந்திராவை பிரிக்க கூடாது-தா.பாண்டியன்:
இந் நிலையில் தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்,
தெலுங்கானா பிரச்சனையில் மத்திய அரசு அவசரமாக முடிவை அறிவித்துள்ளது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், அதற்குள் இன்னொரு மாநிலம் தேவையில்லை என்பதுதான் எங்கள் நிலை. இந்தியா கூறுபட மேலும் இடம் கொடுக்கக் கூடாது.
தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குப் பின்னர் திமுக அல்லாத ஆட்சி அமையும். அது எத்தகைய அரசு என்பது தேர்தலின்போது முடிவு செய்யப்படும் என்றார்.