தெலுங்கானா: காங்கிரஸில் பிளவு- சோனியாவுக்கு அதிர்ச்சி தந்த ஜெகன்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர காங்கிரஸ் கட்சியிலேயே பிளவு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் எம்பியுமான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தந்தையின் மறைவுக்குப் பின் முதல்வர் பதவிக்கு குறி வைத்த ஜெகன் மோகன் ரெட்டியை காங்கிரஸ் தலைமை ஒடுக்கிவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் தலைமைக்கு பாடம் புகட்ட சமயம் பார்த்து வந்த ஜெகன் மோகன், தெலுங்கானா விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
அவரது தலைமையில் ராயலசீமா- கடலோர ஆந்திர காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்திய தலைமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த கோஷ்டிக்கு எதிராக தெலுங்கான பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் தெலுங்கானாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் எம்.பிக்களே இரு பிரிவாக நின்று கொண்டு நாடாளுமன்றத்தி்ல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பிரதமர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தெலுங்கு தேசம் எம்பிக்களுடன் சேர்ந்து கொண்டு ஜெகன்மோகன் ரெட்டி மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டதை சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி மேலிடத்திடம் தெலுங்கானா ஆதரவு காங்கிரஸ் எம்பிக்கள் புகார் கூறியுள்ளனர்.
பஸ் போக்குவரத்து 6-வது நாளாக நிறுத்தம்:
இந் நிலையில் ஆந்திராவில் தெலுங்கானா ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்ந்து வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்குவது 6வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.