கண்புரை அறுவை சிகிச்சை-9 பேர் பார்வை பறிபோனது
கோவை: தனியார் மருத்துவமனையில் கண் புரை (கேடராக்ட்) அறுவை சிகிச்சை செய்துகொண்ட 9 பேருக்கு கண்பார்வை பறிபோனது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள லுத்ரான் மிஷன் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட 23 பேர் தனியார் மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 14 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மற்ற 9 பேர் பணம் செலுத்தி சிகிச்சை பெற்றனர். இலவச சிகிச்சை பெற்றவர்கள் ஆபரேஷன் முடிந்ததும் உடனடியாக வீடு திரும்பிவிட்டனர். ஆனால் மற்ற 9 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தனர்.
இந்த 9 பேரும் சிகிச்சைக்கு பிறகு கண்பார்வை தெரியவில்லை என புகார் கூறினர். இதில் 2 பேரை அவர்களின் உறவினர்கள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
மற்ற 7 பேரின் உறவினர்கள் நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து இன்ஃபெக்ஷன் ஆனதால் இந்த கோளாறு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
அங்கு ஆரம்பக்கட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்த பின்னர், இன்று காலை 7 பேரும் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை சுகாதாரத் துறை இணை இயக்குனர் துரைக்கண்ணன் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்து விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications