திமுக எம்.எல்.ஏ, மேயருக்கு கொலை மிரட்டல் - என்.கே.கே.பி. ராஜா மீண்டும் கைது
ஈரோடு: ஈரோடு மேயர் குமார் முருகேஷ் மற்றும் திமுக எம்.எல்.ஏ ஓ.சுப்ரமணியம் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி தம்பதியின் நிலத்தை அபகரிக்க முயன்றதாக சர்ச்சையில் சிக்கினார் ராஜா. பின்னர் பழனிச்சாமியின் மகன் சிவபாலனை ஆள் வைத்து கடத்திச் சென்று அடித்து உதைத்ததாக மறுபடியும் சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து அவர் அமைச்சர் பதவியிலிருந்தும், திமுகவிலிருந்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து தலைமறைவான ராஜா முன்ஜாமீன் கோரினார். அவர் கோர்ட்டில் சரணடையுமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து பெருந்துறை கோர்ட்டில் தனது 2வது மனைவி உமாமகேஸ்வரியுடன் சரணடைந்தார் ராஜா. பின்னர் ஜாமீன் நிபந்தனைப்படி ராமநாதபுரத்தில் தங்கியிருந்து இருவரும் அங்குள்ள கோர்ட்டில் தினசரி கையெழுத்திட்டு வந்தனர்.
சமீபத்தில் இவர்களின் ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதையடுத்து ஈரோடு வந்தனர்.
ஈரோடு வந்த அவர் தன் மீதான நடவடிக்கைகளில் திமுகவினர் தனக்கு ஆதரவாக இல்லாததால் கோபமடைந்து திமுக நிர்வாகிகளைச் சந்தித்து மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.
இதையடுத்து பவானிசாகர் திமுக எம்.எல்.ஏ. ஓ.சுப்ரமணியம் நம்பியூர் போலீஸில் புகார் கொடுத்தார். அதேபோல ஈரோடு மேயர் குமாரும் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து கவுந்தப்பாடியில் உள்ள ராஜாவின் வீட்டுக்கு விரைந்த போலீஸார், வீட்டை சுற்றி வளைத்தனர். அவரை வெளியேற விடாமல் தடுத்து மருத்துவர்களை வரவழைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனையை நடத்தினர்.
தகவல் அறிந்ததும் அங்கு ராஜாவின் ஆதரவாளர்கள் திரண்டு விட்டனர். இருப்பினும் அவர்களை மடக்கி நிறுத்தினர் போலீஸார். இரவு முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் ராஜா.
பின்னர் நேற்று பிற்பகல், ராஜா வீட்டுக்கு டி.எஸ்.பி. செல்வக்குமார் தலைமையில் போலீஸார் வந்தனர். அப்போது ராஜாவின் வக்கீல்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் பேச்சு நடந்தது.
பின்னர் மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜா கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை அங்கிருந்து கோபி கோர்ட்டுக்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தினர். ராஜாவை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜா கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications