திருச்செந்தூர் வாக்காளர்களுக்கு அதிமுக ரூ. 1 கோடி-பகீர் புகார்
நெல்லை: திருசெந்தூர் வாக்களர்களுக்கு நெல்லை ஹோட்டலில் தங்கியிருந்த அதிமுகவினர் ரூ.1 கோடி வரை பணம் பட்டுவாடா செய்ததாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரனுக்குச் சொந்தமான மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான ஹோட்டல்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி ரூ. 41 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக வாளகத்தில் உள்ள ஹோட்டல் மற்றும் நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில், திருச்செந்தூர் தொகுதி வாக்களர்களுக்கு வினியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் போலீசார் மதுரை ரோட்டில் உள்ள ஹோட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு குறிப்பிட்ட ஒரு அறையில் இருந்த நபரிடம் போலீசார் சோதனை நடத்தியபோது 8 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக வாளகத்தில் உள்ள ஹோட்டலில் போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு தங்கியிருந்த சிலரிடம் இருந்து சுமார் முப்பத்தி மூன்றே கால் லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது நாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம். ஒரு நிலத்தை பத்திர பதிவு செய்ய தயார் நிலையில் வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர துணை கமிஷனர் மாணிக்க ராவ் கூறுகதையில், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ய நெல்லையில் உள்ள 2 ஹோட்டல்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் 2 குழுக்களாக செயல்பட்டு சோதனை நடத்தி பணத்தை பறி்முதல் செய்தோம். நெல்லை சந்திப்பு ஓட்டலில் நடத்திய சோதனையில் 7 லட்சத்து 90 ஆயிரத்து 590 கைப்பற்றினோம்.
இதை வைத்திருந்த புதுககோட்டை மாவட்ட அதி்முக செயலாளர் கருப்பையா, மதுரை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சந்திரன், திருவரங்குளம் ஓன்றிய செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கார் டிரைவர் சதிஷ் குமார், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொக்கிரகுளம் ஹோட்டலில் 33 லட்சத்து 30 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பாளை மகாராஜா நகரை சேர்ந்த அதிமுக பிரமுகர் அப்பாத்துரை, மற்றும் ஊத்துமலை ஓன்றிய செயலாளர் சுப்பிரமணிய பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 ஹோட்டல்களிலும் நடத்திய சோதனையில் மொத்தம் 41 லட்சம் பணமும், 1 காரும், செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தேவைப்பட்டால் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரனிடமும் விசாரணை நடத்துவோம் என்றார்.
அதிமுக வழக்கறிஞர் செல்வகுமார் கூறுகையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருந்ததாக கூறுவது தவறு. மேலும் அதிமுக கொடி சிம்பல் எதுவும் இல்லை. ரியல் எஸ்டேட் தொழிலுக்குதான் பணம் வைக்கப்பட்டிருந்தது. இது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்றார்.
இந் நிலையில், திருசெந்தூர் தொகுதி மக்களுக்கு ரூ.1 கோடி வரை பணம் பட்டுவாடா செய்திருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோட்டல் அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு பணத்தை பிரித்து கட்டுவதற்கு பயன்படுத்திய ஏராளமான ரப்பர் பேண்டுகளையும் கைப்பற்றினர். போலீசார் பறிமுதல் செய்த பணத்தில் 100 ரூபாய் நோட்டுகளே அதிகம் இருந்தன.
அதிமுக தேர்தல் அலுவலகங்கள் சூறை...
இதற்கிடையே திருசெந்தூர் தொகுதியில் பல இடங்களில் அதிமுக தேர்தல் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. பாஜக கொடி கிழிக்கப்பட்டத்தை கண்டித்து தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.