'புகாரை நிரூபிக்காத ஜெயலலிதா'-ஸ்டாலின்
வந்தவாசி: எலெக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி இடைத் தேர்தல்களை புறக்கணித்த ஜெயலலிதா இப்போது மட்டும் போட்டியிடுவது ஏன் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து, கொட்டும் மழையில் பிரச்சாரம் செய்த அவர் பேசுகையில்,
சில அரசியல் தலைவர்கள் போல நாங்கள் உங்களை தேடி, தேர்தல் காலத்தில் மட்டும் வருவதில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுபவர்கள்தான் முதல்வர் கருணாநிதியும் நாங்களும்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விக்கு பிறகு ஜெயலலிதா கொடநாட்டிற்கு ஓய்வுக்கு சென்று விட்டார். சில மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற 5 சட்டமன்ற இடைத் தேர்தல்களை சந்திக்க பயந்து புறக்கணித்தார்.
இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு ஜெயலலிதா சொன்ன காரணம், எலெக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு செய்யப்படுகிறது. எந்த பட்டனை அழுத்தினாலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு பதிவாகிறது என்றார் ஜெயலலிதா.
அந்தப் புகாரை நிரூபித்து காட்டுமாறு இந்திய தேர்தல் ஆணையம் புகார் தெரிவித்த கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், தனது புகாரை நிரூபிக்க ஜெயலலிதா முன் வரவில்லை.
இந்த இடைத் தேர்தலிலும் எலெக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்தப்படவுள்ளன. இப்போது மட்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?. கட்சி காணாம்ல போய்விடும் என்ற பயத்தால் தானே..
ஆனால், நாங்கள் எந்த நிலையிலும் தேர்தல்களை புறக்கணித்தது கிடையாது. மக்களை சந்திக்க பயந்ததும் கிடையாது.
இந்தியாவில், ஏன் உலக அளவில் கூட வழங்க முடியாத வகையில், தமிழகத்தில்தான் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. விவசாயிகளின் கடன் ரூ. 7,000 கோடியை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் கருணாநிதி.
சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையிலும், உங்களால் உருவாக்கப்பட்ட உங்களது ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் திமுகவுக்கு உங்கள் வாக்குகளை குவித்து மிகப்பெரிய வெற்றியினை வழங்க வேண்டும்.
பாசத்துடன், அன்புடன், உரிமையுடன், உங்கள் வீட்டுப் பிள்ளையாக, கலைஞரின் மகனாக உங்கள் பாதமலர்கள் தொட்டு கேட்கிறேன். திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார் ஸ்டாலின்.
திமுகவினர் கார்களில் மது பறிமுதல்:
இந் நிலையி்ல் இடைத் தேர்தல் நடக்கும் திருச்செந்தூர் தொகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் திமுகவினர் கார்களை சோதனையிட்டு மது பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.
நெல்லை எஸ்.பி. அஸ்ரா கார்க் தலைமையிலான போலீசார் நடத்திய இந்த சோதனையில் திமுகவினரின் கார்களில் இருந்து 160 மது பாட்டில்கள் சிக்கின.