3 பெண்களை கொன்ற 'சைக்கோ' வாலிபர் கைது
தர்மபுரி: பெற்றோரின் தவறான நடத்தையாலும் சினிமாவின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்ட 22 வயது வாலிபர் இதுவரை மூன்று பெண்களை கற்பழித்து, கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி குண்டுலட்சுமி. வயது 36. கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர் கடந்த வாரம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, முள் புதரில் பிணமாகக் கிடந்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் உப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (22), குண்டுலட்சுமியை தனது கூட்டாளிகளுடன் கற்பழித்து, கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
வேலுச்சாமியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மேலும் பல கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் தொடர்பு கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வத்தலகுண்டைச் சேர்ந்த நர்ஸ் பிரேமா, திண்டுக்கல் ஹோட்டலில் வேலைபார்த்த அழகம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பிண்ணனியில் வேலுச்சாமி இருந்துள்ளார்.
வேலுச்சாமியுடன் அவரது கூட்டாளிகளான உப்பாரப்பட்டிசேர்ந்த வெங்கடாசலம் (24), சேட்டு (19) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இளம் வயதில் பெற்றோர் பிரிந்து சென்றதும், சரியான அன்பு காட்டப்படாததுமே இந்த இளம் வயதில் வேலுச்சாமி கொடூர கொலைகளில் ஈடுபட முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்று விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறினார்.
இளம் வயதிலேயே கற்பழிப்பு மற்றும் கொடூர கொலைகளில் ஈடுபட்ட வேலுச்சாமி குறித்து விசாரணையில் தெரியவந்தவை:
'வேலுச்சாமியின் சிறுவயதில் இருக்கும் போதே அவனின் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர். தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தாய் வேறு ஒருவருடனும் சென்றுவிட்டார்.
இதனால் இளம் வயதிலேயே அக்கம் பக்கத்தவர்களால் வேலுச்சாமி ஒதுக்கி வைக்கப்பட்டான். பெற்றோரின் நடவடிக்கையால் சமுதாயத்தில் அவனுக்கு ஏற்பட்ட அவமானம் மனதில் ஆழமாக பதிந்துபோனது.
தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் மீது வரவேண்டிய கோபம் திசைமாறி ஒட்டுமொத்த பெண்களையும் சிறுவயதில் இருந்தே அவன் வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினான்.
நாளாக நாளாக அந்த எண்ணம் வலுவாகி ஒரு சைக்கோ போலவே மாறிவிட்டான். சிவப்பு ரோஜாக்கள்', மன்மதன்' ஆகிய சினிமா படங்களில் வரும் காட்சிகள் அவனை பாதித்துள்ளது.
வேலுச்சாமி பெண்களுடன் பழகுவது போல நடித்து காட்டுப் பகுதிகளுக்கு அழைத்து சென்று கூட்டாளிகளுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்யத் தொடங்கினான் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications