'வழக்குகளை நீதிபதி தினகரன் விசாரிக்க மாட்டார்'!
பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன், அடுத்த உத்தரவு வரும் வரை இனி எந்த வழக்கு விசாரணையையும் நடத்த மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீது, அரசு புறம்போக்கு நிலத்தை பெருமளவில் ஆக்கிரமித்துள்ளதாகவும், விதிகளுக்குப் புறம்பாக வீடுகள், நிலங்களை வாங்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதனால் அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இதுபோன்ற ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய முடியும் எனக் கூறி நீதிபதி தினகரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வர ராஜ்யசபா எம்.பி.க்கள் 76 பேர் கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கிடையே, நீதிபதி தினகரன் நேற்று உயர்நீதிமன்ற பணிகளில் ஈடுபடவி்ல்லை. கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தினகரன் விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
தன் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளியாயின.
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் நீங்கள் நீதிபதியாக கடமையாற்ற முடியாது என்று தினகரனிடம் கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், நீதிபதி தினகரன் அடுத்த உத்தரவு வரும் வரை இனி எந்த வழக்கு விசாரணையையும் நடத்த மாட்டார் என கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பூதிஹால் அறிவித்துள்ளார்.