தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு - எம்.எல்.ஏ பதவியை உதறினார் சிரஞ்சீவி
தெலுங்கானா விவகாரத்தில் ஆந்திராவில் உள்ள முக்கியக் கட்சிகள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி உடைந்து போகும் அபாயத்தை சந்தித்து வருகிறது. இதே நிலைதான் காங்கிரஸிலும்.
இந்த நிலையில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரான சிரஞ்சீவி இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன் பாபு உண்ணாவிரதம்:
இந் நிலையில் தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் மோகன்பாபு போராட்டத்தில் குதித்துள்ளார். ராயலசீமா பகுதியைச் சேர்ந்த இவர் திருப்பதியில் தெலுங்கானாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் பல்கலைக்கழக மாணவர்களை மோகன்பாபு சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் மாணவர்களுடன் சேர்ந்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.
மகன் படம் ஓடிய தியேட்டர் சூறை:
மோகன் பாபுவின் உண்ணாவிரதத்துக்கு எதிராக ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மோகன் பாபுவின் மகன் விஷ்ணு நடித்த சலீம் படம் ஓடும் தியேட்டருக்குள் மாணவர்கள் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
மேலும் தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் மோகன்பாபு, அவரது மகன் படங்களை திரையிட விடமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மோகன்பாபு தாஜா:
இதையடுத்த மோகன் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாங்கள் கலைஞர்கள். எங்களுக்கு மொழி, இனம், மாநிலம் என்ற பேதம் கிடையாது. ஆந்திர நடிகர்களின் படங்கள் தமிழ்நாடு, கர்நாடகாவில் ஓடுகிறது. அதே போல் அங்குள்ள நடிகர்களின் படம் ஆந்திராவில் ஓடுகிறது. நடிகர் அனைவரும் இந்தியர்கள்தான். எங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா, ராயல சீமா பகுதிகளில் உள்ள எல்லா மக்களும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.
ராஜினாமா முடிவை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு அனைவரையும் கலந்தாலோசிக்கவில்லை. ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கே என் ஆதரவு. ஒருங்கிணைந்த ஆந்திராவில்தான் வளர்ச்சி திட்டம் சாத்தியமாகும்.
காங்கிரஸும், தெலுங்கு தேசமும் தங்கள் நிலைப்பாட்டை திடீர் என்று மாற்றிக் கொண்டன. இரு கட்சிகளும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க தவறிவிட்டன என்று குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே ஆந்திரா, ராயலசீமா பகுதிளைச் சேர்ந்த பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏக்கள் பதவி விலகியிருந்தனர். தற்போது சிரஞ்சீவியும் விலகியுள்ளார்.